கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் மதுரங்குளிப் பகுதியில் இன்று (06) திங்கட்கிழமை காலை 8.10 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் படுகாயமடைந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் மதுரங்குளிப்பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளமையினால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இன்று (06) அதிகாலை கொழும்பிலிருந்து புத்தளம் மார்க்கம் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த குறித்த பஸ், 10ஆம் கட்டைக்கும் மதுரங்குளிக்கும் இடையில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதன்போது குறித்த பஸ்ஸில் பயணித்தவர்களுள் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவர்கள், முதியவர்கள் என சுமார் 45 பேர் அளவில் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன,
விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் முந்தல் மாவட்ட வைத்தியசாலை மற்றும் புத்தளம் தள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த பயணிகளை பொதுமக்கள், பொலிஸாரின் உதவிகளோடு அம்பியுலன்ஸ், தனியார் வாகனங்களின் உதவியோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த விபத்து இடம்பெற்றதன் பின்னர் கொழும்பு புத்தளம் பிரதான வீதியின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்க சம்பவம் இடம்பெற்ற ஸ்தலத்திற்கு வருகை தந்திருந்ததுடன், போக்குவரத்து பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.(தினகரன்)