மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை கிராமத்தில் நடமாடும் மருத்துவ முகாம் நேற்று முழுநேரமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கமும், மைக்கல் லைற் விளையாட்டுக் கழகமும் மற்றும் கிழக்கு மாகாண மருத்துவப் பிரதிநிதிகள் சங்கமும் இணைந்து மருத்துவ முகாமை ஊத்துச்சேனை வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடாத்தினர்.
புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் அருட்தந்தை எஸ்.நவரெட்ணம் (நவாஜி) தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில், பாடசாலையின் அதிபரும், பழைய மாணவருமான பயஸ் ஆனந்தராஜா, மைக்கல் லைற் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், கிழக்கு மாகாண மருத்துவப் பிரதிநிதிகள் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாம்களில் மட்டக்களப்பின் பிரபல வைத்தியர்களான வைத்தியர்.எஸ்.நிவாசன், வைத்தியர் எஸ்.மங்களநாதன் ஆகியோர் பங்கு கொண்டு பிரதேச மக்களின் மருத்துவப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியதுடன், மருந்துகளையும் வழங்கி வைத்தனர்.
இதன்போது கிழக்கு மாகாண மருத்துவப் பிரதிநிதிகள் சங்கத்தினால் குறித்த மருத்துவ முகாமுக்கு ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்கி உள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் மைக்கல் லைற் விளையாட்டுக் கழகத்தினரால் இப்பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள், புத்தகப் பைகள், எழுதுகருவிகள், உணவு பொட்டலங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.