அப்துல்சலாம் யாசீம்-
இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (13) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சி யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை ஆகியற்றை ஆராய்ந்தனர்.
இந்திய ஊடகவியலாளர்களுக்கும் கிழக்கு மாகாண சபை உயரதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று கிழக்கு மாகாண சபை அலுவலக கேட்போர் கூடத்தில் ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.
இக்குழுவினரை கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடக செயலாளர் எம்.ஹஸன் அலால்தீன் வரவேற்றதுடன் கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இப்பிரதேசத்தின் பொருளாதார முதலீடுகளை மேற்கொண்டு இம்மாகாணத்தின் பொருளாதாரத்தை மேலும் வலுச்சேர்க்க உதவ வேண்டும் என கிழக்கு மாகாண சபை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இறுதியில் உரையாற்றிய இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி. பாண்டி கிழக்கு மாகாணத்தின் தற்போதைய அபிவிருத்தி நிலை குறித்தும் இம்மாகாண வளர்ச்சிக்கு மூல வளங்களின் பயன்பாடு பற்றியும் தாம் இவ்விஜயத்தின் போது அறிந்து கொள்ள நேர்ந்தாகவும் அவர் கூறினார்.
30 வருட கால யுத்தத்தின் பின்னர் இம்மாகாணம் தற்போது அடைந்துள்ள அபிவிருத்தி நிலையானது உலகத்திலுள்ள ஏனைய யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி பிரதேசங்களுக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் தமது குழுவினர் இந்தியா திரும்பியதுடன் இந்நாட்டின் உண்மைநிலையினை இந்திய மக்களுக்கும் .வர்த்தக சமூகத்தினருக்கும் தெரிவித்து உள்ளாசப்பிரயாணத்துறை பொருளாதாரத்துறைகளில் இம்மாவட்டம் மேலும் முன்னேற்றம் அடைய ஆவண செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் 11 மாநிலங்களைச்சேர்ந்த 28 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.அன்ஷார் மற்றும் கிழக்கு மாகாண சபையின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.