ஏகஇறைத் திருத்தலமாம் கஃபா தன்னை
இபுறாகீம் நபியவர்கள் அமைத் தளித்தார்
ஏகஇறை தன்னை- யங்கே வணங்க வேண்டும்
இணையாக வேறு இறை அங்கே இல்லை.
<* XXXXXXXXX*>
ஏகனையே வணங்கி வந்த ஆலயத்தில்
இணைவைப்பார் புகுந்து சிலை வைக்கலானார்
வேதனைக்கே உரியஇந்த நிலைமை தன்னை
வேரோடு களைந்தெறிதல் கடமை என்றே.
<* XXXXXXXXX*>
மாதவராம் எங்கள்நபி முனைந்து நின்றார்
மக்காவுக் கேகிடவே கனிந்து நின்றார்
தோழர்பத் தாயிரம்பேர் இணைந்து சென்றார்
தூயபணி செய்திடவே மக்கா சென்றார்
<* XXXXXXXXX*>
மக்காவுக் கேகிடவே கனிந்து நின்றார்
தோழர்பத் தாயிரம்பேர் இணைந்து சென்றார்
தூயபணி செய்திடவே மக்கா சென்றார்
<* XXXXXXXXX*>
வழிதனிலே அபூசுபியான் ஒளிந் திருந்து
வள்ளல்நபிக் கூறுசெய்ய முனைந்த போது
வழிமேலே விழிவைத்த தோழர் கூட்டம்
வாகாகச் சுபியானைக் கைது செய்தார்
<* XXXXXXXXX*>
சுபியானின் மீதுள்ள குற்றம் அந்தோ
சொற்களிலே அடங்காது அனந்தம் கண்டீர்
இஸ்லாத்தின் ஆரம்ப காலம் தொட்டே
எதிரியாய் இயங்கி வந்தார் நபிகள்மீது
<* XXXXXXXXX*>
வசைபாடித் துன்புறுத்தி மகிழ்ச்சி கொண்டார்
வள்ளல் - நபிதனைக் கொல்லத் திட்ட மிட்டார்
மதீனா – மேல் போர் தொடுக்க முனைந்து நின்றார்
மக்கத்துக் காபிர்களின் தலைவர் ஆனார்.
<* XXXXXXXXX*>
இத்தனையும் செய்த அபூ சுபியான் தன்னை
இங்கிதராம் நபிமுன்னே நிறுத்தி னார்கள்
குற்றங்கள் பலபுரிந்த சுபியான் தன்னை
கொலைசெய்யும் தண்டனையே வேண்டும் என்றே
<* XXXXXXXXX*>
மற்றவர்கள் எண்ணிநின்ற போதும் ஆங்கே
மாநபிகள் அற்புதமாய் நடந்து கொண்டார்
சுபியானைக் கருணையுடன் நோக்கி நின்றார்
சுபியானே ! என்மொழியைக் கேளும் என்றார்
<* XXXXXXXXX*>
அகிலத்தின் அதிபதியாம் அல்லாஹ் என்னை
அவன்தூதாய் அனுப்பி வைத்தான் மாந்தருக்கு
இறைதூதை எத்திவைத்து இஸ்லாம் தன்னை
இயன்றவரை பரப்பு தென் கடமை காண்பீர்
<* XXXXXXXXX*>
குற்றம் செய் மாந்தர் தமை கொல்வ தெங்கள்
கொள்கையன்று குற்றத்தை உணர வைத்து
வெற்றிதரும் நேர்வழியில் நிலைப்ப டுத்தி
வாழவைத்தல் நபிவழியாம் என்றுரைத்தார்.
<* XXXXXXXXX*>
ஆனந்த மேலீட்டால் ...அபூ சுபியானும்
அன்புநபி பாதத்தைப் பணிந்து தொட்டார்
மாதவத்து மாநபியே அருட் பிழம்பே
மன்னியுங்கள் என்னை எனக் கெஞ்சிக் கேட்டார்
<* XXXXXXXXX*>
நான் செய்த குற்றமெலாம் மன்னித் தென்னை
நல்வழிக்குத் திருப்பிவிட்ட நபிகள்கோனே!!
வாழ் நாளில் இனிநானும் உங்கள் தோழன்
அல்லவனைப் புகழ்ந் திஸ்லாம் ஏற்றேன் என்றார்.
<* XXXXXXXXX*>