க.கிஷாந்தன்-
பதுளை கொழும்பு பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் தலவாக்கலை புகையிரத நிலையத்தின் சுரங்கப்பகுதிக்கு அருகாமையில், 115வது மைல் கட்டைப்பகுதியில் 20.12.2017 அன்று இரவு 11 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன.
இதன் காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு நேர தபால் ரயில் தலவாக்கலை புகையிரத நிலையத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் தரித்து வைக்கப்பட்டது.
அதன்பின் பாதிப்பேற்பட்ட ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் ஈடுப்பட்டனர்.
எனினும் 21.12.2017 அதிகாலை 2.00 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையகத்திற்கான புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாக தலவாக்கலை புகையிரத நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் தலவாக்கலை புகையிரத நிலையத்தில் தரித்து வைக்கப்பட்ட இரவு நேர தபால் ரயில் கொழும்பை நோக்கி புறப்பட்டது.
20.12.2017 அன்று மலையக பகுதிகளில் பெய்த தொடர்ச்சியான மழை காரணமாகவே இந்த புகையிரத பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.