தேசிய காங்கிரஸ்-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான அரசியல் சூழ்நிலையில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல் எம் அதாஉல்லா விடுத்துள்ள ஊடக அறிக்கை.
உள்ளுராட்சித் தேர்தலின் மூலம் நாட்டு மக்கள் அவர்களின் உண்மையான அபிலாசைகளைத் தெரிவித்திருக்கின்றனர். அத்தோடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பதவிக்கு தகுதியற்றவர் என்பதனையும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். ஏற்கனவே பல தேர்தல்களில் தோல்வியுற்று உட்கட்சிப்பூசலினால் நலிந்து போய்க்கிடந்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தல் மூலம் பின்கதவால் நரித்தனமாக நுழைந்து, பிரதமர் பதவியைப் பெற்றுக் கொண்டார். ஆயினும் எவ்வாறான சந்தர்ப்பங்களிலும் இரண்டு வருடங்களுக்கு மேல் அவரால் எப்பதவியாயினும் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பது எனது திடமான நம்பிக்கையாக இருந்து வந்தது.
அதற்கேற்றாற்போல், மக்கள் இம்முறையும், உள்ளுராட்சித் தேர்தலின் மூலம் ரணில் விக்ரமசிங்கவை படுமோசமாக தோற்கடித்திருக்கிறார்கள். இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் நாட்டுப் பற்றுள்ளவர்களும், கட்சியின் விசுவாசிகளும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று விடாப்பிடியாக இருக்கின்றனர்.
ஆளுமையின்மை, நாட்டிற்கு விசுவாசமற்ற அரசியல் நடவடிக்கை, ஒருபோதுமில்லாதவாறு உச்ச ஊழல் நிறைந்த நிருவாகம், நாட்டின் திறைசேரியையே பச்சையாகக் கொள்ளையடித்த துரோகம், பொதுவாக நாட்டு மக்களும், குறிப்பாக சிறுபான்மை மக்களும் குறுகிய காலத்திற்குள் அனுபவித்த துன்பியல் சம்பவங்கள், முறையற்ற சட்டவாக்க நிறைவேற்றமும் - அதன் தொடர் கதையுமே ரணிலின் எதிர்ப்பலைக்கு காரணங்களாய் அமைந்தன.
முதலில், நாட்டையும் மக்களையும் வாழ வைப்பதாகவிருந்தாலும், அல்லது, பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுப்பாதையில் இருந்து தவிர்ப்பதாக இருந்தாலும், ஆகக்குறைந்தது, இத்தருணத்திலாவது ரணில் விக்ரமசிங்க,ä தனது பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும்.
மேற்கத்திய கொள்கைகளை முற்றுமுழுதாகக் கடைப்பிடித்துவரும் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இராஜினாமா விடயத்தில் மாத்திரம் பல்டி அடிப்பது கேலிக்கூத்தாகவே பார்க்கப்படுகிறது. இது, ஜனநாயகத்திற்கு ரணில் விக்ரமசிங்க பெரும் விரோதி என்பதனை பறைசாற்றி நிற்கிறது. தேர்தல்களை பிற்போடுவதற்கு அவர் எடுத்த எத்தணங்கள் அக்கருத்தை மேலும் வலுவூட்டி நிற்கிறது.
உண்மையில், நாட்டு மக்களின் அபிலாசைகளில் அக்கரை கொண்டுள்ளவர்களாக, இந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களேயானால், ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து தூக்கி வீசுவதற்கு, கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தயாராகுமாறு தேசிய காங்கிரஸின் தலைமை, இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களை வினயமாக வேண்டிக் கொள்கிறது. தவறும் பட்சத்தில், இந்நாட்டு மக்கள் நம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான அழுத்தங்கள் கொடுக்க ஆயத்தமாகிவிடுவார்கள்.
இல்லையேல், நாட்டுமக்கள் ஒவ்வொருவரினதும் பெறுமதிமிக்க வாக்குரிமைகளை, பணமும் பொதிகளும் கொடுத்து சு10றையாடுகின்ற கொள்ளையர்களிடமிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாமல் போய்விடும் என்பதனை அழுத்தியும் தெரிவித்துள்ளார்.