மிகவும் இறுக்கமான போட்டி: யார் மேயர்? பலத்தஎதிர்பார்ப்பு!
காரைதீவு நிருபர் சகா-அம்பாறை மாவட்டத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு இன்று(2) திங்கட்கிழமை பி.ப 2.30மணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் சபையின் சபாமண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்தெரிவு இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கல்முனை மாநகரசபையானது 43வேட்பாளர்களைக்கொண்டது. 40 உறுப்பினர்கள் தெரிவாகவேண்டும். அவர்களில் பெண்கள் தொகை 10.
இம்முறை இச்சபைக்கு 9கட்சிகளும் 2சுயேச்சைகளும் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தன.இருந்தும் 2சுயேச்சை அணிகளின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன. எனவே 9 கட்சிகளும் 4சுயேச்சைகளும் போட்டியிட்டன. ஆதலால் இங்கு 559 வேட்பாளர்கள் களத்தில் குதித்து தற்போது தொங்கு உறுப்பினர் உள்ளிட்ட 41உறுப்பினர் தெரிவாகியுள்ளனர்.
இதில் ஜக்கியதேசியக்கட்சி(மு.கா) 12ஆசனங்கள் சுயேச்சைக்குழு4(சாய்நதமருது) 9ஆசனங்கள் தமிழரசுக்கட்சி(த.தே.கூ) 7ஆசனங்கள் அ.இ.ம.கா 5ஆசனங்கள் தமிழர்விடுதலைக்கூட்டணி 3ஆசனங்கள் தேசியகாங்கிரஸ் 1ஆசனம் நல்லாட்சிக்கான தேசியமுன்னணி 1ஆசனம் ஸ்ரீல.சு.கட்சி 1 ஆசனம் சுயேச்சைக்குழுஇரண்டு 1ஆசனம் சுயேச்சைக்குழுமூன்று 1ஆசனம் என அமைந்துள்ளது.
கல்முனை மாநகர சபையில் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களை கொண்ட 41 ஆசனங்களுக்கிடையே வாக்கெடுப்பு இடம்பெறவிருக்கின்றது. வாக்கெடுப்பில் கட்சிகள் என்பதற்கு அப்பால் முஸ்லிம்கள் தரப்பில் 28 உறுப்பினர்களும் தமிழர்களது தரப்பில் 13 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.
கூடுதல் ஆசனங்களை கொண்டுள்ள முஸ்லிம் கட்சிகளான ஐ.தே.க. மற்றும் அ.இ.ம.கா. என்பன தமக்கிடையே முதல்வருக்கான போட்டிகளை ஏற்படுத்தினால் முன்னொருபோதுமில்லாதவகையில் தமிழ்தரப்புக்கு தலைமையைப் பெறும் வாய்ப்புக்கள் தென்படுவதை அவதானிக்கமுடிகின்றது.
காரைதீவு பிரதேசசபை அமைப்பில் கடந்த 27.3.2018இல் த.அ.கட்சிக்கு மு.கா. ஆதரவு நல்கியுள்ளது. அதேபோல் 29.03.2018இல் பொத்துவில் பிரதேசபை அமைப்பில் மு.கா ஆட்சியமைக்க த.அ.கட்சி ஆதரவு நல்கியிருந்தது. அதேபோல் இங்கும் ஆதரவு நல்கலாமெனத்தெரிகிறது.
எவ்வாறு வாக்களிப்பு அமையும்?
கல்முனை மாகநரசபைக்கு ஒரு தொங்கு உறுப்பினர் உள்ளடங்கலாக 41உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
இவர்களில் சாய்நதமருது சுயேச்சைஅணியின் 9உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளமாட்டார்களெனில் மீதி 32பேருக்கிடையில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் மூன்று வகையில் ஆட்சியமைக்க வழியுள்ளது.
முதலாவது தெரிவு: த.அ.கட்சியும் ஸ்ரீல.முகாவும்(ஜ.தே.கட்சி) இணைந்து அதாவது அவர்களது மு.காவின் 12ஆசனங்களும் த.அ.கட்சியின் 7ஆசனங்களும் ஏனைய 3தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கமுடியும். இவ்வாறு நிகழந்தால் மு.கா மேயராக த.அ.கட்சி பிரதிமேயராக வாய்ப்புண்டு.
இரண்டாவது தெரிவு: ஜ.தே.கட்சியும் அ.இ.ம.காங்கிரசும் மருதமுனை சேச்சைஅணி மற்றும் சில முஸ்லிம் உறுப்பினர்கள் சேர்ந்தும் முஸ்லிம் என்றபோர்வையில் ஆட்சியமைக்கமுடியும். இங்கு மேயராகவும் பிரதி மேயராகவும் முஸ்லிம்களே வருவர்.
மூன்றாவது தெரிவு: மு.காவுடனான த.அ.கட்சியின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தால் மு.கா தமக்கு ஆதரவானவர்களை சேர்த்து தனித்து மேயர் பதவிக்கும் அ.இ.ம.காங்கிரஸ் தமக்கு ஆதiவாளர்களைச்சேர்த்து அதே மேயர்பதவிக்கும் இ.த.கட்சி தமக்கு ஆதரவானவர்களைச்சேர்த்து அதே மேயர் பதவிக்கும் போட்டியிடலாம்.
இந்த மூன்று வகையான தெரிவுகளில் இரண்டாவது தெரிவு என்பது மு.காவிற்குச் சிரமம். சாத்தியப்பாடு குறைவு.
ஆனால் 1வது தெரிவு சாத்தியமாகலாம். தமிழ்ர் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற கல்முனையில் சபையை பிரச்சினையின்றி சுமுகமாக முன்னெடுத்துச்செல்வதற்கு வழிவகுக்கும் என்றுசொல்லப்படுகின்றது. அதுகூட இருதரப்பிலுள்ள சிலருக்கு அதிருப்தியாகவிருப்பதும் குறிப்பிடலாம்.
மூன்றாவது தெரிவின்போது 3 முடிவுகள் வரும். இதன்போது கடைப்பிடிக்கவேண்டியசட்டரீதியான விளக்கமிது.
வரும் முடிவு இறுதியாக அதாவது குறைந்த வாக்கைப்பெறுகின்ற அணியை நீக்கிவிட்டு கூடுதலாகப்பெற்ற இருஅணியினருக்கிடையில் மாத்திரம் மீண்டும் வாக்களிப்பு நடைபெற்று அவர்களில் யார் கூடுதலாகப்பெறுகின்றனரோ அவர்கள் ஆட்சியமைக்கலாம்.
இதேவேளை இன்று(2) காலை 9.30மணிக்கு நாவிதன்வெளிப்பிரதேசசபைக்கான முதல் அமர்வும் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.அத்தடன் அம்பாறை மாவட்டத்திற்கான சபை அமைப்பு வேலைகள் நிறைவுறுகின்றன.