-ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முஸ்லிம்கள் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும், தியாக சிந்தையுடனும் செயலாற்ற இத்திருநாளில் உறுதிபூண வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலையான சமதானம் நீடிக்கவும், முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பெற்று நிம்மதியாகவும், சமதானமாகவும் வாழ்வதற்கும் இத்திருநாளில் சகலரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
நபி இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை நினைவுகூறும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் சகல முஸ்லிம்களுக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தியாகத்தின் அடையாளமாக விளங்கும் இத்தினத்தில் நாங்கள் உழ்ஹிய்யாக் கடமையை உள்ளிட்ட எமது பணிகளை மிகவும் கவனமாக முன்னெடுக்க வேண்டும். உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும் போது நாட்டின் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை மீறாமல் அதனை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தியாகம் என்பது அன்று முதல் இன்று வரை முஸ்லிம்களது வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கின்றது. இலங்கையில் கூட தொடர்ந்தும் நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல தியாகங்களை செய்துள்ளோம். பல கோடி சொத்துக்கள், பல உயிர்களையும் இழந்துள்ளோம்.
எதிர்காலத்திலும் நாங்கள் பல்வேறு சவால்களையும் - பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறான நிலையில் நாங்கள் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும், தியாக சிந்தையுடனும் செயலாற்ற வேண்டும். ஒற்றுமையே எமது சமூகத்தின் பலமாகும். சர்வதேச ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை முறியடிக்க வேண்டுமாயின் எம்மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும்.
நாட்டில் நிலையான சமதானம் நீடிக்கவும், முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பெற்று நிம்மதியாகவும், சமதானமாகவும் வாழ்வதற்கும் இத்திருநாளில் சகலரும் பிரார்த்திக்க வேண்டும். அத்துடன், இஸ்ரேலின் கெடுபிடிகளுக்கு மத்தியில் வாழ்கின்ற பாலஸ்தீன மக்களுக்காகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் கேரள மக்களுக்காகவும் நாங்கள் விசேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். – என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.