அரச பொது நிர்வாகம் தோட்டங்களுக்கு வருவதற்கு இனி தடையில்லை

வீடமைப்பு ஆரம்ப விழாவில் திலகர் எம்பி

இதற்கு முன்னதான பல்வேறு மண்சரிவு அனரத்தங்களின்போதும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் ஊடாக நாம் வீடுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இப்போது இடர் முகாமைத்துவ அமைச்சின் ஊடாகவும் வீடமைப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்துகின்றோம். அதற்கு தேவையான காரணிகளைப் பெற்றுக் கொடுக்கவும் அந்த நிலத்தை தயார் செய்யவும் எமது அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. தோட்டப் பகுதிகளுக்குள் அரச நிறுவனங்களைக் கொண்டு சேவையாற்றுவதற்கு இருந்த தடையை பாராளுமன்ற சட்டங்களின் ஊடாக நீக்கியுள்ளோம் என்று நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் இணைப்பு உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ரம்பொடை, வெதமுல்லை, லில்லிஸ்லேண்ட் தோட்டத்தில் மண் சரிவு அபாயத்துக்கு உட்பட்ட 105 குடும்பங்களுக்கான தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (30/9) கொத்மலை பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இடர் முகாமைத்துவ அமைச்சோடு மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் நுவரலியா மாவட்ட செயலாளர் ரோஹன புஸ்பகுமார, மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஶ்ரீதரன், ஆர்.இராஜாராம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவன தலைவர் வீ.புத்திரசிகாமணி, கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் தொழிற்சங்க முக்கியத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

லில்லிஸ்லேண்ட் தோட்டத்தில் 2015 ஆம் ஆண்டு மண்சரிவு ஆபத்தினால் பாதிப்புற்ற 20 குடும்பங்களுக்கு எமது அமைச்சினால் உடனடியாக 20 தனிவீடுகள் அமைத்து “ குறிஞ்சித்தென்னவன புரம் “ எனும் பெயருடன் வழங்கப்பட்டது. இன்று அதே வீடமைப்புத் திட்டத்திற்கு அருகாமையில் மேலதிக 105 வீடுகளை அமைப்பதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னதாக இந்த 105 குடும்பங்களும் தற்காலிக முகாமாக செயற்பட்ட ரம்பொடை இந்து கல்லூரியில் நிர்க்கதியாகி நின்றபோது இடர்முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவுடன் இணைந்து நானும் மாகாண சபை உறுப்பினர் ஶ்ரீதரனும் வருகை தந்து உடனடி உதவிகளைப் பெற்றுக் கொடுத்ததோடு அன்று வழங்கிய வாக்குறுதிகளின்படி இன்று தனி வீடுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

வீட்டுக்கான செலவினை தலா பன்னிரண்டு லட்சம் இடர் முகாமைத்துவ அமைச்சு பெற்றுக் கொடுக்கும் அதேவேளை காணி தயார்படுத்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக தலா இரண்டு லட்சம் ரூபாவை அமைச்சர் பழநி திகாம்பரம் பெற்றுக் கொடுத்துள்ளார். குறித்த வீட்டினைப் பெறும் பயனாளிக்கு காணி உரைமையானதாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையிலேயே இந்த திட்டம் கொண்டுவரப்படுகின்றது. இத்தகைய காணி உரிமையை தமிழ் முற்போக்கு கூட்டணி தமது அரசியல் பலத்தின் ஊடாக வெற்றிகொண்டுள்ளதால் நாம் இலகுவாக இடர் முகாமைத்துவ அமைச்சின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க தாமே இந்த வீடமைப்புத் திட்டத்துக்கு நிலத்தைப் பெற்றுக் கொடுத்ததாக தஞ்சாவூர் பேர்வழிகள் இங்கே வந்து தண்டோரா போட்டதாக கேள்விப்பட்டோம். அவர்களால் இயன்ற வேலைகளை அவர்கள் பார்க்கலாம். அளவுக்கு மீறிய வேலைகளை செய்ய ஆசைபட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. அமைச்சர் திகாம்பரம் சமர்ப்பித்து அனுமதி பெற்ற அமைச்சரவை பத்திரத்தின் ஊடாகவே இந்த காணி உரிமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்பதை அவர்களுக்கு சொல்லிவைக்க விரும்புகிறேன். நாங்கள் இந்தக் காணிகளை பெற்றுக் கொடுக்க எந்த அளவு உழைத்தோம் என்பதை கொத்மலை பிரதேச செயலாளர் நன்கு அறிவார். புரட்டோப் பாதை அபிவிருத்தியிலும் இதே நிலைமைதான். விரைவில் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் போது இத்தனை ஆண்டுகளாக செப்பனிட முடியாது இருந்த பாதையை யார் முன்னின்று செய்யப் போகிறார்கள் என்பது தெரியவரும். தவிரவும் பெருந்தோட்ட சமூக குடியிருப்புகளுக்கான பாதைகளை தோட்ட நிர்வாகத்திடம் இருந்து அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனும் பிரேரணை ஒன்றை நான் பாராளுமன்றில் கொண்டுவரவுள்ளேன். பாராளுமன்றத்திற்கு தெரிவாகியும் அங்கு வராதவர்களுக்கு பிரேரணை என்றால் என்னவென்று புரியாது என மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -