ஒலுவில் துறைமுகத்தை உடன் அகற்றுங்கள்! பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் கோரிக்கை


லுவில் மீனவர்களுக்கும் அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தி இருக்கும் கடலரிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்கு ஒலுவில் வர்த்தகத் துறைமுகத்தை உடன் மூடிவிடுமாறு சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒலுவில் மீனவத் துறைமுகத்தை அப்படியே வைத்துவிட்டு வர்த்தகத் துறைமுகத்தை மூடி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை தனது போராட்டம் தொடரும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியின் முழு விவரத்தை கீழே தருகின்றோம்.

கேள்வி : ஒலுவிலில் ஏற்பட்டிருக்கும் பாரிய கடலரிப்புக்கு காரணம் என்ன?

பதில்: ஒலுவில் துறைமுகம்தான் இதற்குப் பிரதான காரணம்.இது எமது மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது.கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதியே அஸ்ரப் இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார்.ஆனால்,இதில் உள்ள பாதகங்கள் அப்போதைய அதிகாரிகளால் அல்லது அரசால் அஸ்ரப் அவர்களுக்கு சொல்லப்படவில்லை என்று நான் இப்போது உணருகிறேன்.அப்படிக் கூறி இருந்தால் தலைவர் இதை நிர்மாணிப்பதற்கு இணங்கி இருக்கமாட்டார்.

இந்தத் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாரிய கடலரிப்பு ஏற்படத் தொடங்கியது.இந்தத் துறைமுக நிர்மாணத்தின்போது கடலினுள் பாரிய கருங்கற்களால் தடை அமைக்கப்பட்டது.இந்தத் தடை ஏற்படுத்தப்பட்ட நாள் முதல் ஒலுவில்,நிந்தவூர்,பாலமுனை,சாய்ந்தமருது,காரைதீவு,மாளிகைக்காடு போன்ற ஊர்களில் கரைவலை மீன்பிடி கிட்டத்தட்ட இல்லாமலேயே போயுள்ளது.
இயற்கையாக இடம்பெற்று வந்த கரை நீரோட்டம் பாதிக்கப்பட்டதனால் கரையோரத்தின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் கடல்நீர் துறைமுக வாயிலை அடைப்பதுடன் துறைமுக்கத்தின் தென்பக்கம் மணலைக் கொண்டுவந்து சேர்க்கின்றது.துறைமுக வாயில் அடைபடுவதனால் துறைமுகத்தினுள் மீன்பிடி படகுகள் நுழைய முடியாமல் உள்ளன.
இதனால் துறைமுகத்தின் வடக்கு திசை பாரிய கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது.இதனால் வெளிச்ச வீடு மற்றும் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் போன்றவை பாதிக்கப்பட்டதால் இவற்றைப் பாதுகாப்பதற்காக அதிகாரசபை கடலினுள் வடக்கு தெற்காக அலைத்தடுப்பு வேலி ஒன்றினை அமைத்தது.

இந்த வேலி அமைக்கப்பட்டதன் பின் வடக்கில் இருக்கும் கிராமங்களானஅட்டப்பள்ளம்,நிந்தவூர்,காரைதீவு,மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது போன்ற ஊர்கள் பாரிய கடலரிப்புப் பிரச்சினைக்கு உள்ளாகிவிட்டன.பாலமுனை கடற்கரை சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை கடலுக்குள் சென்றுவிட்டது.இதனால் இவ்வூர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன.

15 ஆயிரம் கரைவலை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.கடல் தாவரங்கள் பல அழிந்து வருகின்றன.கரையோரத்தில் இருந்த வயற்காணிகள் மற்றும் தென்னந்தோப்பு உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட ஏக்கர் காணி கடலுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.கடற்பாறைகள் வெளித்தள்ளப்பட்டுள்ளதால் மீனவர்களின் வலைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அன்று முன்னாள் பணிப்பாளர் அணில் ஜயசிங்கவுடன் கூட்டம் ஒன்றில் இருந்தபோது அங்கிருந்த பொறியியலாளர் ஒருவர் இந்தக் கடலரிப்பு பற்றி ஒரு தகவலைச் சொன்னார்.கொழும்பு துறைமுகத்தால் ஏற்பட்ட அழிவு போன்றதொரு அழிவு கிழக்கில் ஏற்படும் என்று சொன்னார்.

அதாவது திருகோணமலையில் இருந்து பொத்துவில் வரை கடலரிப்பு ஏற்படும் என்று கூறினார்.அவர் கூறியது உண்மை.அந்த அழிவை நாம் இப்போது சந்தித்து வருகின்றோம்.
தங்களது ஆட்சிக் காலத்திலேயே இந்தத் துறைமுகத்தை நிர்மாணித்துவிட வேண்டும் என்று சில அரசியல்வாதிகள் எடுத்த நடவடிக்கை காரணமாகவே இத்துறைமுகம் நிர்மாணித்து முடிக்கப்பட்டது.இல்லாவிட்டால் துறைமுக அதிகார சபை நிர்மாணித்த வெளிச்ச வீட்டோடு இது நின்றிருக்கும்.

துறைமுகத்துக்கு வரும் வாய் கடலுக்கு மேல் நோக்கி இருக்கின்றது.இதனால் அலைகள் அதிகமான மண்ணை நேராகவே துறைமுகத்துக்கு கொண்டு வருகின்றது.அந்த அலையைத் தடுத்து நிறுத்தி வேறு வழியாக கப்பலைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது.கிழக்கு மாகாணத்து கடல்கள் உக்கிரமானவை என்பதால் அதற்கு ஏற்ப துறைமுகத்தை அமைத்திருக்க வேண்டும்.

கே: இது தொடர்பில் நீங்கள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன?

கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை ஒலுவிலுக்கு அழைத்துச் சென்று காண்பித்துள்ளேன்.
ஜனாதிபதியைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளோம்.இந்தத் துறைமுகம் இயங்காவிட்டால் அதை நீக்கிவிடுங்கள் என்று அந்த மகஜரில் நாம் முதலாவதாகக் கூறியுள்ளோம்.அப்படி இல்லையென்றால் கடலின் எல்லையை கடலுக்குள் ஒரு மீற்றர் வரை பின்தள்ள வேண்டும் எனக் கேட்டுள்ளோம்.
இப்போது இந்த நீரோட்டம் கடலுக்குள் போடப்பட்டுள்ள கற்களில் முட்டுவதால்தான் இந்த அரிப்பு ஏற்படுகின்றது.அந்தக் கற்களைத் தாண்டி கடல் இருக்குமானால் நீரோட்டம் சீராக ஓடிக்கொண்டிருக்கும்.மண்ணரிப்பு ஏற்படாது.இயற்கையான செயற்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது.கடலுக்குள் கற்களை போட்டு செயற்கையாக மாற்றம் செய்ததன் காரணமாகவே இந்த அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மகஜரைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்து இதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நாம் மூன்று சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளோம்.அந்த மூன்று சந்திப்புக்களிலும் அந்தக் குழுவின் தலைவர் எமது நிலைப்பாட்டோடு ஒத்துப்போகின்றார்.துறைமுக அதிகார சபை அதற்கு சம்மதிக்கவில்லை.
ஒலுவில் துறைமுகத்தை எப்படியாவது நடத்திச் செல்ல வேண்டும் என்று துறைமுக அமைச்சர் மஹிந்த சரசிங்க அதிகம் முயற்சி செய்கின்றார்.இருந்தாலும்,அதற்கான சரியான தீர்மானத்தை இன்னும் எட்ட முடியாமல் இருக்கின்றது.
ஆனால்,இந்த விடயத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் என்னைக் குறிவைத்து வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.எனக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
கே:இதற்குத் தீர்வாக நீங்கள் முன்வைக்கும் யோசனைகள் என்ன?

ப: பாறாங்கற்களைப் போட்டு இந்த அரிப்பைத் தடுக்க முடியாது.அவை கரைவலை மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.ஆகவே,வென்னப்புவ போன்ற இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றிபெற்ற ஆழ்கடலில் இருந்து மண்ணை அகழ்ந்து கரையோரத்தை மீள்நிரப்பும் செயற்பாட்டின் மூலமாகே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காணமுடியும்.

மறுபுறம்,மீனவ துறைமுகத்தை அப்படியே வைத்துவிட்டு அந்தத் துறைமுகத்துக்கான வேறொரு வழியை மீனவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து வர்த்தகத் துறைமுகத்தை அகற்றிவிட வேண்டும்.

அந்த மீனவ துறைமுகத்தில் மண் நிரம்பும் பிரச்சினை வந்தால் கிரிந்த,தங்காலை போன்ற இடங்களில் செய்வதுபோல் ஒரு சிறிய இயந்திரத்தைப் பயன்படுத்தி மண்ணை அகற்ற முடியும்.இதற்கான வேண்டுகோளை நாம் முன்வைத்துள்ளோம்.
உண்மையில்,ஒலுவில் வர்த்தகத் துறைமுகத்தை யாராலும் இலாபகரமாக நடத்திச் செல்ல முடியாது.இந்தத் துறைமுகத்தில் நிரம்பும் மண்ணை அகற்றும் செலவு அதிகமாக இருப்பதால் எந்தவொரு முதலீட்டாளராலும் இந்தத் துறைமுகத்தை பாரமேற்று நடத்திச் செல்ல முடியாது.

இதனால்தான்,இந்தத் துறைமுகத்தை நாம் வேண்டாம் என்று சொல்கிறோம்.ஆனால்,துறைமுக எதிராக சபை அதற்கு உடன்படுவதாக இல்லை.
கே: நீங்கள் அறிந்து இது சம்பந்தமாக அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா?
ப: இந்த விடயம் தொடர்பில் துறைமுக அமைச்சர் மஹிந்த சமரசிங்க டென்மார்க் சென்று பேசினார் என்றும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிதியை வழங்குவதாக அந்நாட்டு உறுதியளித்துள்ளதாகவும் அவர் என்னிடம் கூறினார்.
இது உடனடியாக நடக்கப்போகின்ற காரியமல்ல.அதற்கான நேரம் வரும் முன் ஊரே அழிந்துவிடும்.இந்தத் துறைமுகம் ஒரு வெள்ளை யானை.இதற்கு செலவழிப்பது வீண்.இந்தத் துறைமுகத்தை உடன் நீக்க வேண்டும்.மக்களின் வரிப் பணம் இந்தத் துறைமுகத்துக்கு செலவிடப்படுகின்றது.இதனால் எந்த நன்மையையும் இல்லை.பணமும் வீணாகி மீனவர்களின் வாழ்வும் நாசமாகின்றது.
கே:அப்படியென்றால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

ப: ஒலுவில் மீனவ துறைமுகத்தை அப்படியே வைத்துவிட்டு வர்த்தகத் துறைமுகத்தை மூடிவிட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.இதுதான் சரியான நிலைப்பாடும்கூட.இந்த விடயத்தில் வெற்றியை அடையும்வரை நான் ஓயாது உழைப்பேன்.
-எனக் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -