முல்லைத்தீவில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தற்கொலை விவகாரத்தில் புது திருப்பம்


பாறுக் ஷிஹான்-
முல்லைத்தீவில் 14 வயதான பாடசாலை மாணவனின் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே பொறுப்பேற்க வேண்டுமென, மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுதொடர்பாக மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறையிடுவதற்கும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.
செம்மலை மகாவித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்விகற்கும் மாணவன் ஒருவர் அண்மையில் காட்டு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். பிரேத பரிசோதனையில், இது தற்கொலை முடிவானது.
இந்த தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம், விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லையென தற்கொலை செய்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மாணவனின் தற்கொலைக்கான காரணத்தை தெரியாமலிருந்ததாகவும், இறுதிச்சடங்கின் பின்னர், சக மாணவர்கள் மூலமாகவே, தற்கொலைக்கான காரணத்தை அறிந்து கொண்டதாகவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் உயிரிழந்த மாணவனின் தந்தை குறிப்பிடும்போது-
“நாங்கள் எமது பிள்ளையை நல்ல ஒழுக்கத்துடன் வளர்த்து வருகின்றோம். நான் ஒரு ஆசிரியர். எனது பிள்ளை எவ்வாறு இருப்பான் என்பது எனக்கு தெரியும். அதனைவிட அவனை பற்றி பாடசாலையில் உள்ள வகுப்பறை ஆசிரியருக்கு நன்றாக தெரியும்.
சம்பவ நாள் அன்று தரம் 09 இல் கல்விகற்கும் 3 மாணவர்கள் விளையாட்டு திடலில் மாங்காய் பிடுங்கி சாப்பிட்டுவிட்டு, விளையாட்டு அரங்கிற்கு அருகில் சென்றுள்ளார்கள்.
அந்த விளையாட்டு மைதானத்தில், அதற்கு சில நாட்களிற்கு முன்னதாக இராணுவத்தினரின் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அவர்கள் பாவித்த சிகரட் மிச்சங்கள் அங்கு காணப்பட்டுள்ளன. சிகரெட்டின் பேப்பரால் சுற்றப்பட்ட துண்டை எடுத்த மாணவர்கள், அதை சும்மா பற்ற வைத்துள்ளனர்.

தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர், அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அவர்கள் மூவரும் சிகரெட் பற்றினார்கள் என்று கூறி, படையினர் பாவித்த சிகரட் துண்டுகளை எடுத்து ஆசிரியரிடம் காட்டியுள்ளார்கள்.
அதிபரிடம் அந்த சிகரெட துண்டுகள் போக, அவர் அதை மேசையில் வைத்து விட்டு, மூன்று மாணவர்களையும் அழைத்தார். பின்னர், அனைத்து மாணவர்கள் ஆசிரியர்களையும் அழைத்து அதை காண்பித்தார்.

இந்த சம்பவம் காலை 11.00 மணிக்கு நடைபெற்றுள்ளது.
அதன் பின்னர் மூன்று மாணவர்களை அறை ஒன்றிற்குள் பூட்டிவைத்து, அதிபர் ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்கள்.
மாணவர்கள் ஏதும் பிழை விட்டிருந்தாலும், அது பற்றி பாடசாலையால் பெற்றோராகிய எமக்கு தெரியப்படுத்தப்படவில்லை.

மாலை 5.00 மணிவரை மதிய உணவோ, தண்ணீரே இல்லாமல் மாணவர்களை அடைத்து வைத்துள்ளார்கள். பாடசாலை நேரம் முடிந்தும் மாணவர்களை பாடசாலைக்குள் பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் அடைத்து வைத்திருந்தது பாடசாலை சமூகத்தின் தவறு.
மாணவன் விட்ட பிழைக்கு அதிபர், ஆசிரியர் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றைய தவறு. சக மாணவர்கள் மத்தியில் அந்த மாணவனை உளவியல்ரீதியில் தாக்கப்படுத்தியமை பாடசாலை சமூகத்தின் தவறு.
அதிபர் ஆசிரியர் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயம் .
எனது மகன் பாடசாலை ஆசிரியர், அதிபரின் உடல்ரீதியாக தாக்குதலிற்கும், உளரீதியான தாக்குதலிற்கும் உள்ளாகியே உயிரிழந்துள்ளார். இதற்கு பாடசாலை சமூகம் பொறுப்பு கூறவேண்டும்
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடக்கவேண்டும். பாடசாலை சென்ற மாணவன் வீடு திரும்பாமல், பாடசாலை சீரூடையுடன் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவனது மனதை பாதிக்கும் வகையில் பாடசாலை சமூகம் செயற்பட்டுள்ளது. இதனை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களோ சிறுவர்கள் மீது அக்கறை கொண்டவர்களோ சரியாக விசாரணை செய்துகொள்ளவில்லை
எனது மகன் இறந்த பின்னும் அவனுக்கு கெட்ட பெயரினையே பாடசாலை சமூகம் கொடுத்துள்ளது. இதற்கு நீதி வேண்டும். இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளேன்“ என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -