அபிவிருத்தி மழையில் நனையும் ஒலுவில்! பைசல் காசிம் அதிரடி


* அல்-ஹம்ரா மகாவித்தியாலத்துக்கு 25 லட்சம் ரூபா

* அடிப்படை சுகாதார வேலைத் திட்டத்துக்கு ஒரு கோடி 60 லட்சம் ரூபா

* ஒலுவில் வைத்தியசாலைக்கு இரண்டு மாடி கட்டடம்

* மதீனா மஹாவித்தியாலத்துக்கு 2 மாடிக் கட்டடம்

* ஒலுவில் துறைமுகத்தை மீன் பிடித் துறைமுகமாக மாற்றுவது தொடர்பில் அடுத்த வாரம் நடவடிக்கை

* ஒலுவில் துறைமுக நிர்மாண காணி சுவீகரிப்பு:மீதி நட்டஈடு வழங்குவதற்காக அடுத்த வாரம் அமைச்சரவை பத்திரம் தயாரிப்பு


ஒலுவிலில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் எடுத்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை [15.02.2019] இடம்பெற்ற ஒலுவில் அல்-ஹம்ரா மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது அந்தப் பணிகள் தொடர்பில் விவரித்தார்.அவர் அங்கு கூறியவை வருமாறு:

எனது அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத இடம்தான் இந்த ஒலுவில் அல்-ஹம்ரா மகாவித்தியாலயம்.2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எனக்கு இந்தப் பாடசாலையில் இடப்பட்ட 2400 வாக்குகளால்தான் நான் நாடாளுமன்றம் சென்றேன்.

இந்தப் பாடசாலையில் நிலவும் பல குறைபாடுகள் பற்றி அதிபரும் ஆசிரியரும் என்னிடம் கூறினார்கள்.அந்தக் குறைபாடுகளில் ஒன்றுதான் பிரதான நுழைவாயில் பிரச்சினை.

ஏப்ரல் மாதம் பட்ஜட் நிறைவேறியதும் 25 லட்சம் ரூபா நிதியை இந்தப் பாடசாலையின் நுழைவாயில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒதுக்குவேன் என்று வாக்குறுதி வழங்குகிறேன்.

அது மாத்திரமன்றி,எமது சுகாதார அமைச்சு உலக வங்கியின் நிதி உதவியுடன் ஆரம்பித்திருக்கும் அடிப்படை சுகாதார வேலைத் திட்டத்துக்குள் நாம் ஓலுவில்லையும் சேர்த்திருக்கின்றோம்.மத்திய முகாமும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒலுவிலுக்கு ஒரு கோடி 60 லட்சம் ரூபா நிதியை நாம் செலவளிக்கவுள்ளோம்.அதனூடாக,வைத்திய ஆய்வுகூடம்,கதிர் இயக்கப் பிரிவு மற்றும் அவற்றுடன் இணைந்ததாக மேலும் பல வைத்திய வசதிகளும் ஒலுவில் வைத்தியசாலைக்கு வழங்கப்படும்.

ஒலுவில் மக்கள் சில வைத்திய சேவைகளை பெறுவதற்கு அக்கறைப்பற்றுக்கோ அல்லது கல்முனைக்கோ செல்ல வேண்டியுள்ளது.ஆனால்,மேற்படி வேலைத் திட்டம் முன்னெடுப்பட்டால் ஒலுவில் மக்கள் ஒலுவிலிலேயே வைத்திய சேவையைப் பெறக்கூடியதாக இருக்கும்.

இரண்டு மாடி கட்டடம் ஒன்றையும் அந்த வைத்தியசாலையில் இந்த வருடம் நிர்மாணிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

ஒலுவில் மதீனா மஹாவித்தியாலத்தில் 2 மாடிக் கட்டடம் ஒன்றையும் நிர்மாணிக்கவுள்ளோம்.

ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணியின்போது காணிகள் இழந்தவர்களுக்கு பதில் காணிகளை நான் முன்நின்று பெற்றுக் கொடுத்துள்ளேன்.மீதி நட்டஈட்டுப் பணத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருடன் அடுத்த வாரம் கலந்துரையாடப்படும்.

இங்கு இருக்கும் முக்கிய பிரச்சினை ஒலுவில் துறைமுகமாகும்.இதை மூட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் தொடர்ந்தும் இருக்கின்றேன்.இதனால் மக்கள் எதிர்நோக்கும் அழிவு அதிகமாகும்.இதைக் கொண்டு நடத்துவதற்கு வருடம் தோறும் 30 கோடி ரூபா தேவைப்படுகின்றது.அவ்வாறு செலவழித்தும் அரசு நட்டத்தையே எதிர்நோக்க வேண்டி வரும்.

இதை மீன்பிடித் துறைமுகமாக மாற்றிவிட வேண்டும் என்று நான் அப்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்.இது தொடர்பில் அடுத்த வாரம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் பேச்சு நடத்தவுள்ளோம்.இவைபோல் மேலும் பல அபிவிருத்திப் பணிகளை நான் மேற்கொள்ளவிருக்கின்றேன்.-என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -