- முபாறக் அப்துல் மஜீத் உலமா கட்சித்தலைவர்-
அப்பாவிகள் மீது நடைபெற்ற தொடர் தாக்குதல்களை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி குழுவொன்றை அமைத்திருப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.இது பற்றி உலமா கட்சி தெரிவித்ததாவது,
நடந்த சம்பங்களை மனிதம் உள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது விடயத்தில் ஈடுபட்டவர்கள் யார், அவர்களின் பின்னணி என்பதை நிச்சயம் ஜனாதிபதியின் குழு கண்டுபிடிக்கும் என நம்புகிறோம். இதில் எழுந்தமானமாக ஒரு சமூகத்தை சேர்ந்தோரை குற்றம்சாட்டாமல் உண்மையை உலகுக்கு கொண்டு வர இந்த ஆணைக்குழு உறுதியாக ஈடுபடும் என நம்புகிறோம்.
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஒருக்காலும் தனிநாடு கேட்டதில்லை. நாட்டு பிரிவுக்கெதிராக கொடி தூக்கியவர்கள் முஸ்லிம்கள். சிங்கள, தமிழ், கிறிஸ்தவ மக்களுடன் அந்நியோண்யமாக, சகோதரர்களாக பல்லாண்டு காலமாக வாழ்பவர்கள்.
அவர்களை ஏனைய சமூகத்திலிருந்து பிரிப்பதற்கு சதி செய்த போதெல்லாம் முஸ்லிம் கல்விமான்கள் திறம்பட செயற்பட்டு ஐக்கியத்துக்காக உழைத்துள்ளார்கள்.
தற்கொலைதாரிகளின் உடலில் அரபு மொழியில் பச்சை குத்தப்பட்டிருந்ததாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்கள் பச்சை குத்துவதை ஹராம் என்பவர்கள். சாதாரண முஸ்லிம் கூட பச்சை குத்தமாட்டான்.
ஆகவே இங்கு ஏதோ சதி நடப்பது போல் தெரிகிறது. முஸ்லிம்கள் மீது பழி போட அரபு மொழியில் பச்சை குத்தியிருக்கலாம்.
எது எப்படியிருப்பினும் ஜனாதிபதி குழு பரந்துபட்ட விசாரணைகளை மேற்கொள்ளும் என நம்புகிறோம். அந்தக்குழுவுக்கு முஸ்லிம் சமூகம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.