முகத்தை மூடும் புர்கா தடை செய்யப்பட்டுள்ளதே தவிர, அபாயா தடை செய்யப்படவில்லை என்பதை நான் தெளிவாக கூறியுள்ளேன். அபாயாவை அணிய வேண்டாம் எனக்கூற இதுவரை எந்த சட்ட அடிப்படையும் இல்லை எனவும் நான் கூறியுள்ளேன்.
அதேவேளை கொழும்பில் பல சிங்கள பாடசாலைகளில் அபாயா அணிந்து வரவும் தடை இருக்கிறது. அதுபற்றி எவரும் கதைப்பதில்லை. ஆசாத் சாலியும், இவைபற்றி வாயையும், கண்ணனையும் மூடிக்கொண்டு இருக்கிறார்.
ஆக, அவிசாவளை தமிழ் பாடசாலையின் பெற்றோர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதுதான் இங்கே ஒரே பிரச்சினையாக எல்லோருக்கும் இருக்கிறது. இந்த பாடசாலையின் அபாயா அணிந்த ஆசிரியைகளை சேலை அணிந்து வருமாறு பெற்றோர் வலியுறுத்தும் காணொளியை வைத்துக்கொண்டு வாத பிரதிவாதம் செய்ய வேண்டாம்.
இத்தகைய வாத பிரதி வாதங்கள், சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் நாடு முழுக்க இந்த நிமிடத்தில் நடைபெறுகின்றன. சிங்கள சமூக ஊடகங்களில் பிரமாண்டமான இஸ்லாம்-முஸ்லிம் விரோத சிந்தனை கொளுந்து விட்டு எரிகிறது. அங்கே மிகவும் மோசமாக கழுவி ஊற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவை பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் கூட எதிரொலிக்கின்றன. இவற்றை எம்மை போன்றவர்கள்தான் எதிர்கொண்டு அவ்வப்போது அமைதிப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
இன்று நாடுமுழுக்க, தமது பிள்ளைகளின் உயிர் பாதுகாப்பு பற்றி பெற்றோர் பதட்டமும், கோபமும், அடைந்து இருப்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏப்ரல் 21 ஐஎஸ்-ஐஎஸ் குண்டு வெடிப்பு நடைபெற்று நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதையும், காயமடைந்ததையும், கணக்கில் எடுக்காமல் இப்படியான சம்பவங்கள் நடக்கவே இல்லை என்பது போன்று போலித்தனமான பாசாங்கு செய்யக்கூடாது.
ஏப்ரல் 21 ம் அன்று வெடித்த ஏழு குண்டுகளில், ஐந்து குண்டுகள் வெடித்து, அதிகம் பாதிக்கப்பட்டது எனது கொழும்பு மாவட்டம் ஆகும். இந்த பாடசாலை அமைந்துள்ள அவிசாவளையும், கொழும்பு மாவட்டம் ஆகும். ஏப்ரல் 21 ம் திகதிய குண்டு வெடிப்பில் அவிசாவளையை சார்ந்த சிலரும் கொல்லபட்டுள்ளனர்.
நாளைய தினம் கொழும்பின், வெள்ளவத்தை, நாவலை, பஞ்சிக்காவத்தை, கோட்டை ஆகிய இடங்களில் குண்டு தாக்குதல் நடைபெற போவதாக உளவு தகவல் கிடைத்துள்ளது. இத காரணமாக கொழும்பு பரபரப்பாகவும், பதட்டமாகவும் இருக்கிறது. தமிழ், சிங்கள, முஸ்லிம் பெற்றோர்கள் கொதிநிலையில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அனைத்து தரப்பினரும், நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த ஆசிரியைகள், இந்த நிலைமையை மேலும் மோசமாக்க கூடாது. என்னுடன் ஒத்துழைக்க வேண்டும். எங்கோ இருந்துகொண்டு எவரும் ஊடகங்களின் மூலம் தீயை பற்ற வைக்க கூடாது.
இதுவே ஒரு சிங்கள பாடசாலையாக இருந்தால், நிலைமை பாரதூரமான கட்டத்தை அடைந்து இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
அவிசாவளை பாடசாலை பெற்றோர், அபாயா அணிந்த ஆசிரியைகளுடன் வாதப்பிரதிவாதங்களை செய்த போது அங்கு வந்த அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி விகும் வீரசேகர, பெண் பொலிஸ் அதிகாரியை அழைத்து வந்து, அபாயா அணிந்த ஆசிரியர்களை உடற்பரிசோதனைக்கு உட்படுத்தி, தீர்வு காண முயன்றுள்ளார். அதை அந்த ஆசிரியைகள் ஏற்றுக்கொள்ள மறுத்து, ஆளுனரை பாரக்க போயுள்ளனர்.
இதுபற்றி விகும் வீரசேகரவும், வலய கல்வி பணிப்பாளர வீரசூரியவும் எனக்கு தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் முழுமையாக காணொளியில் இடம் பெறுகிறதா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அந்த பிரதேசத்தின் சட்டம் ஒழுங்குக்கும், கல்விக்கும் பொறுப்பு கூறும் இரண்டு அரசாங்க அதிகாரிகள், ஒரு அமைச்சர் மற்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய எனக்கு இவற்றை தெரிவித்துள்ளனர்.
உடற்பரிசோதனைக்கு ஆசிரியைகள் இடமளிக்கவில்லை என்ற விஷயம், இந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதையும் பொலிஸ் பொறுப்பதிகாரி விகும் வீரசேகர எனக்கு கூறியுள்ளார். அதை ஒரு கௌரவ பிரச்சினையாக ஆசிரியைகள் நினைத்து விட்டதாக விகும் வீரசேகர என்னிடம் கூறுகிறார்.
உண்மையில் நாட்டு நிலைமையை மனதில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். நாடாளுமன்ற நுழைவாயிலில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற ஊழியர்கள் என்ற பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒவ்வொரு முறை உள்நுழையும் போதும் முழுமையான உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றோம். எமது வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு தரம் உள்நுழையும் போதும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.
எனவே, இது கௌரவ பிரச்சினை அல்ல. தேசிய பாதுகாப்பு பிரச்சினை.
நான் நாளை அந்த பாடசாலைக்கு சென்று சகல தரப்பினருடனும் கலந்து பேசி இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பேன். இது எனது மாவட்டம். என் மீது இங்கே வாழும் அனைத்து இன மக்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது.
எனவே என் பணியை ஆற்ற எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். அரைகுறையாக விஷயங்களை அறிந்துக்கொண்டு எனக்கு எவரும் இடையூறு விளைவிக்க வேண்டாம்.