ஆலயடிவேம்பு புளியம்பத்தை பிரதேசத்தில் 5.5 மில்லியன் நிதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தக புதிய கட்டட திறப்பு விழாவும், அதனை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று (10) கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்து அதனை மக்கள் பாவனைக்கும் கையளித்து வைத்தார். இதன்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளர் வைத்திய கலாநிதி எம்.ஏ.நபில், சுதேச திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவந்த நோயாளிகளின் பதிவுப் புத்தகத்தில் முதற் பதிவை பிரதம அதிதி கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சாரினால் பதிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வைத்தியர்கள் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதருடன் இணைந்து கொண்டு படங்களை எடுத்தமையும் சிறப்பம்சமாகும்.