அட்டன் மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பிட்டவல பகுதியில் 08.08.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் மூன்று மணித்தியாலயங்கள் தடைப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரம் சரிந்து விழுந்ததால் மின் கம்பமும், மின் கம்பியும் அறுந்து விழுந்ததன் காரணமாக அப்பிரதேசத்திற்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மரத்தை வெட்டி அகற்றியுள்ளதோடு, மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் பிரதான வீதியில் கிடப்பதனால் அவ்வழியில் ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.
போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக கொழும்பு மற்றும் அவிசாவளை செல்லும் வாகனங்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.