ஞாயிற்றுக்கிழமை( 11) மாலை பாண்டிருப்பு முதல் சாய்ந்தமருது வரை அதிகளவான இராணுவத்தினர் பாதுகாப்பு சோதனைக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
இராணுவ தளபதியின் குடும்பம் குறித்த தாக்குதலுக்குள்ளான வீட்டை பார்வையிடுவதற்காக வருவதை அறிந்த ஊடகவியலாளர்கள் புகைப்படங்கள் எடுக்க சென்ற போதிலும் குறித்த வீட்டிற்கு அருகே நின்ற இராணுவ அதிகாரிகள் ஊடகவியலாளர்களை அவ்விடத்தில் இருந்து அகன்று செல்லுமாறு தெரிவித்தனர்.மேலும் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டை சுற்றி கடும் காவல் நடவடிக்கையை முன்னெடுத்த இராணுவ மோட்டார் சைக்கிள் படையணியும் களத்தில் நின்று பொதுமக்களை விசாரணை மேற்கொண்டதை காண முடிந்தது.
எனினும் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்த வீட்டினை குறித்த இராணுவ தளபதியின் குடும்பத்தினர் பார்வையிடாமல் திரும்பி சென்றதாக இராணுவத்தின் சில தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு திரும்பி செல்வதற்கு முன்னர் மருதமுனை பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கும் கிழக்கு மாகாண இராணுவ தளபதி சென்றுள்ளார்.மேலும் அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் இராணுவ பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள் குண்டுத்தாக்குதலுக்குள்ளான வீட்டை கண்காட்சி பொருளாக வெளிமாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கூட்டிச்சென்று காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டை இவ்வாறு இராணுவத்தினர் சென்று பார்ப்பது தொடர்பாக அருகில் உள்ள மக்கள் அச்சம் தெரிவித்து வருவதுடன் சில இராணுவத்தினர் இவ்வாறு குறித்த வீட்டை பார்ப்பதன் நோக்கம் அதை புனரமைத்து கொடுப்பதற்காக உதவிகளை பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி சென்றுள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு தற்கொலை தாக்குதலுக்கு உள்ளான சியோன் தேவாலயத்தை ராணுவ தளபதி உட்பட பாதுகாப்புச் செயலாளர் திடிரென விஜயம் செய்து பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.