கத்தார் தலைநகர் தோஹாவில் உலக தடகள சாம்பியன்-ஷிப் போட்டிகள் நேற்று கோலாகலமாக துவங்கியுள்ளன.
கத்தார் தலைநகர் தோஹாவில் கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் இந்த ஆண்டின் 17-வது உலக தடகள சாம்பியன்-ஷிப் போட்டிகள் கோலாகலமாக துவங்கியுள்ளன. வண்ணமயாக நடைபெற்ற துவக்க விழாவில் கத்தார் அரசு பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். இதையொட்டி நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகளையும், நடன நிகழ்ச்சிகளையும் ஏராளமானோர் கண்டு களித்தனர்.
இந்தப் போட்டிகளில் சுமார் 209 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் தடகள வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். ஆண்கள் பெண்கள் என தனித்தனி பிரிவுகளில் 24 வகையான தடகளப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அவற்றுடன் கூடுதலாக கலப்பு பிரிவினர் பங்கேற்கும் தொடர் ஓட்டமும் நடைபெற உள்ளது.
இதில் இந்தியாவிலிருந்து 27 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அக்டோபர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில், இந்தியாவை சேர்ந்த ஹிமா தாஸ், நீரஜ் சோப்ரா, தேஜஸ்வின் சங்கர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள், காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், 27 வீரர், வீராங்கனைகளுடன் இந்தியா களம் இறங்க உள்ளது.
முதல் நாளில் நடைபெறும் நீளம் தாண்டுதலில், ஸ்ரீசங்கரும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தருண் அய்யாசாமி, மடாரி பில்யாலி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில், இந்தியா இதுவரை ஒரே ஒரு வெணகல பதக்கம் மட்டுமே வென்றுள்ள நிலையில், இந்த முறையாவது இந்தியா பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். அங்கு நிலவும் வெப்ப சூழலை தவிர்ப்பதற்காக இரவு நேரங்களிலும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.