இலவச பஸ், ரயில் சேவை லக்ஸம்பேர்க் நாட்டில் வீதிகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வர இலவச பொதுப் போக்குவரத்து முறை, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று லக்சம்பர்க். இந்நாடு முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடாகும். ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளை அண்டை நாடாக கொண்டுள்ளது. இங்கு 2,586 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 6 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். இந் நாட்டிலுள்ள வீதிகளை கார்கள் பெருமளவு ஆக்கிரமிக்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இங்கு கார்கள் வணிக ரீதியிலான பயணத்துக்கு 47% , ஓய்வு நேர போக்குவரத்துக்கு 71% பயன்படுத்தப்படுகிறது. 32% பயணங்களுக்கு மட்டுமே பஸ் பயன்படுத்தப்படுகிறது. 19% பயணங்களுக்கு மட்டுமே ரயிலை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், வீதிகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இந் நாட்டில் இலவச பொது போக்குவரத்து முறை, நாடு முழுவதும் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இலவச பொதுபோக்குவரத்தை வழங்குகிற முதல் நாடு என்ற பெயரை லக்ஸம்பேர்க் தட்டிச்செல்கிறது.
இந்த இலவச போக்குவரத்து 40% குடும்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. ஒவ்வொருவரும் வருடத்துக்கு $110 (சுமார் 20 ஆயிரம் ரூபா ) சேமிக்க முடியும்.
லக்ஸம்பேர்க்கில் வாழ்கிறவர்கள் ரயில்களில் முதல் வகுப்பில் பயணிக்கவும், பஸ்களில் இரவு நேர பயணத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.