கிழக்கு மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தால் வருமானம் இழந்தோருக்கு கிராம அபிவிருத்திச் சங்கங்களிலிருந்து வட்டியில்லா கடன்!!
தற்போது நிலவிவரும் கொறோனா தொற்று தொடர்பாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கிராம அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் பின்வருமாறு தெரிவித்தார்.
கொறோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அல்லது ஊரடங்குச் சட்டத்தால் வருமானம் இழந்தவர்களுக்கு மாத்திரம் அவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் கொள்வனவுக்காக கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து வட்டியில்லா கடன் தொகையை 5,000 இற்கு மேற்படாமல் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்காக மாத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.
இவர்களது விண்ணப்பத்தை கிராமசேவகர் பரிந்துரை செய்தால் இவ்வாறான கடன்தொகையைப் பெற்று, மீண்டும் அரசாங்க நிவாரணம் கிடைக்கும்போது அல்லது இவ் அவசரகால நிலைமை முடிவடைந்து 2 மாதங்களுக்குள் அத்தொகை மீண்டும் சங்கங்களுக்கு மீளச் செலுத்தப்படல் வேண்டும்.
கிராம அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து பணத்தை மீளப்பெறுவதற்கான பிரதேச செயலாளரால் அனுமதிக்கப்படும் தொகை இதுவரை காலமும் 5,000 ரூபாவாகக் காணப்பட்டது இத் தொகை 50,000 ரூபாவாக உயர்த்தப்படுகின்றது.
இத்தொகை கொறோனா பாதிப்பு அல்லது ஊரடங்குச் சட்டத்தால் வருமானம் இழந்தவர்களுக்கான உடனடி நிவாரண வழங்கலுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் நோக்கத்திற்காக மாத்திரம் பயன்படுத்தப்படவேண்டும்.
கொறோனா தொற்று தொடர்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறித்த சங்கத்தின் கூட்டத் தீர்மானத்தின்படி பிரதேச செயலாளரின் அனுமதிக்கு அமைவாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரால் இச்செயற்பாடு நிறைவேற்றப்பட வேண்டும்.
தற்போது நிலவுகின்ற முகக்கவசங்களுக்கான தட்டுப்பாடுகளை கவனத்தில்கொண்டு எமது மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலைய ஆசிரியர்களால் முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றது.
தேவையானவர்கள் அவர்களை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு www.ruralproducts.lk இணையத்தினூடாகவும் தங்களது கொள்வனவு கட்டளையை சமர்ப்பிக்க முடியும்.
எனவும் தெரிவித்தார்.