ஆலயங்களில் நடைபெறும் சமய வழிபாடுகள் மற்றும் சடங்கு, சம்பிரதான நிகழ்வுகளை உடனடியாக நிறுத்துமாறு அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கொட்டகலையில் 20.03.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அச்சங்கத்தின் பொது செயலாளர் சிவஸ்ரீ.ஸ்கந்தராஜா குருக்கள் கூறியவை வருமாறு,
" உலக நாடுகளில் மட்டுமல்ல இன்று இலங்கையிலும் 'கொரோனா' வைரஸ் பரவி வருகின்றது. எனவே, மக்கள் அனைவரும் விழிப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும்.
குறிப்பாக கலை, கலாசார நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும், அரசாங்கத்தாலும், சுகாதார பிரிவுகளாலும் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறும் நாம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். இது விடயத்தில் இவ்விரு தரப்புகளும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும்.
அதேபோல் மக்கள் கூட்டம் கூடும் வகையிலான வழிபாடுகள், சடங்கு, சம்பிரதாய விடயங்களை நடத்த வேண்டாம் என இந்து குருமார்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
மலையகத்தில் வைரஸ் பீதி தொடர்பான விழிப்புணர்வு குறைவாக இருக்கின்றது. நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காமன் கூத்து போன்ற நிகழ்வுகளையும் நடத்துவதில் இருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும்." - என்றார்.