கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் விமான சேவை உள்பட அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் பெரும் நஷ்டத்தை விமான நிறுவனங்கள் சந்தித்து வருகிறது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், UKயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஏயார்வேஸ் விமான நிறுவனமும் கொரோனா வைரஸால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது சேவையை மேற்கொண்டு வரும் பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனத்தில் சுமார் 45 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸால் பெரும் இழப்பை சந்தித்து வரும் அந்நிறுவனம் நஷ்டத்தை கட்டுப்படுத்த விமானிகள் உள்பட தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
பிரிட்டிஷ் ஏயார்வேசின் தலைமை நிறுவனமான சர்வதேச விமான போக்குவரத்து குழுமத்தின் முக்கிய அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளதால் பிரிட்டிஷ் ஏயார்வேசில் வேலை செய்து வந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.