உச்ச நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்பட்டால் பாரளுமன்றத்தைக் கூட்ட முடியும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கள இணையத் தளமொன்றில் இது குறித்த செய்தி பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதியினால் பாரளுமன்றம் கூட்டப்படாத சந்தர்ப்பத்தில், சபாநாயகரினால் பாரளுமன்றத்தைக் கூட்ட முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் கரு ஜயசூரிய பாரளுமன்றத்தைக் கூட்டுவார் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைக்கு தாம், பாரளுமன்றத்தை கூட்டுவது பொருத்தமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் அவ்வாறு செய்தால் நிறைவேற்று அதிகாரத்திற்கும், பாரளுமன்றத்திற்கும் இடையில் முரண்பாடு எழும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அதன் அடிப்படையில் பாரளுமன்றத்தை கூட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 70ம் சரத்தின் பிரகாரம் பாரளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதத்திற்குள் ஜனாதிபதி பாரளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரளுமன்றத்தை கலைத்த போதும் உச்ச நீதிமன்றின் உத்தரவு கிடைக்கும் வரையில் கரு ஜயசூரிய பாரளுமன்றத்தை கூட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள இணையத் தளமொன்றில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு நெருக்கமானவர்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் கரு ஜயசூரிய நேரடியாக இந்த விடயம் பற்றி எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.