உலகமே கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியிருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் குறைந்தபாடில்லை.
அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கே நிலவி வருகிறது. மேலும், வளைகுடா பகுதியின் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் வழமையாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15ம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்றி வளைத்தனர்.
ஈரானின் கடற்படைக்கு சொந்தமான 11 சிறிய ரக படகுகள் அமெரிக்காவின் கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கி ஏந்திய அனைத்து ஈரான் படகுகளையும் சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''
அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் துப்பாக்கி ஏந்திய ஈரானின் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தி அழிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.
ஈரான் கடற்படையினரின் படகுகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதால் வளைகுடா கடற்பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானின் ராணுவ செயல்பாட்டிற்காக செயற்கைக் கோளொன்றை ஈரான் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானிய கடற்படையினர் அமெரிக்காவின் கப்பலை சுற்றி வளைக்கும் வீடியோ கீழே