மேற்படி எம்.எஸ்.சீ. மெக்னிபிகா (MSC Magnifica) கப்பலில் பயணிகள் மற்றும் பணிக் குழாமினர் உட்பட 2700 பேர் உள்ளனர்.
ஜனவரி 05ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த இந்த கப்பல் உலகெங்கும் பரவிவரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் தனது சுற்றுலா பயணத்தை நிறுத்தியது.
உருவாகியுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு மேற்படி கப்பலைப் பொறுப்பேற்க எந்தவொரு துறைமுகமும் முன்வரவில்லை.
இதன் காரணமாக இத்தாலி நோக்கிப் பயணமான கப்பல் எரிபொருள் மற்றும் வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தது.
இந்த கப்பலில் சேவை செய்த ஒரேயொரு இலங்கையரான அநுர பண்டார ஹேரத் இத்தாலிக்கு கப்பல் செல்ல முன்னர் தன்னை இலங்கை கடலில் வைத்து நாட்டுக்குள் பொறுப்பேற்குமாறு தனது முகநூலின் ஊடாக நேற்றுமுன்தினம், 5ஆம் திகதி, கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
அந்த கோரிக்கை எனது பார்வைக்குக் கிடைத்தவுடன் - கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவிடம் இந்த இளைஞரைப் பொறுப்பேற்று நாட்டுக்குள் அழைத்து வருகுமாறு அறிவுறுத்தினேன்.
அந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் செயற்பட்ட எமது கடற்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு துறைக்கான அவசர பிரிவு, நேற்றைய தினம் அதிகாலை - கொழும்பு துறைமுகத்திலிருந்து 9 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கடற் பிரதேசத்தில் வைத்து, அநுர பண்டாரவைத் தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்தது.
75 வயதான ஜெர்மன் நாட்டு பெண் ஒருவரையும் சிகிச்சைக்காக அழைத்துவரவும் கடற்படையின் அவசர பிரிவு உதவி வழங்கியது.
இவ்வாறு அழைத்து வரப்பட்ட அநுர பண்டாரவை பூசா கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும், ஜெர்மன் நாட்டவரை கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கும் உடனடியாக அனுப்பி வைக்க நடஙடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ஊடகம்.