சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதே சமயம் சீனாவில் கொரோனா வைரஸின் பாதிப்பும் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸூக்கு எதிராக போராடி வரும் நிலையில் உலகின் மிகப்பெரிய மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் 5G இணைய சேவையை சீனா பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
சீனாவின் ஆட்சியிலுள்ள திபெத் நாட்டின் பக்கமுள்ள எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் 5,300, 5,800 மற்றும் 6,500 அடி உயரத்தில் 5G அலைவரிசை கோபுரங்களை சீன அரசாங்கத்துக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சைனா மொபைல் ( China Mobile) , ஹூவாய் ( Huawei ) தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் சேர்ந்து கடந்த வாரம் நிறுவியது.
அதனை தொடர்ந்து, சீன விஞ்ஞானிகள் எவரெஸ்ட் சிகரத்தின் அடி வாரத்தில் முகாம் அமைத்து 5G சேவை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான தீவிர முயற்சியில் இறங்கினார்கள்.
இந்நிலையில் 6,500 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள 5G தொலைத் தொடர்பு கோபுரங்கள் நேற்று முன்தினம் முதல் இணைய சேவையை வழங்க தொடங்கியிருப்பதாக சைனா மொபைல்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் உலகில் அதிக உயரத்தில் 5G கோபுரங்களை அமைத்த நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு மலையேறும் வீரர்களுக்கு சீனா மற்றும் நேபாள அரசாங்கங்கள் முன்னரே தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.