புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பிரபல சமூக சேவையாளரும் பிரசித்தி பெற்ற உயிரியல் பாட ஆசிரியருமான றிசாத் ஷரீப் அவர்களினால் அம்பாறை மாவட்டத்தில் புதிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் தொழில் புரியும் அவரது நண்பர்களினதும், தனவந்தர்களினதும் உதவியுடன் முன்னெடுத்துவரும் இவ்வுதவித்திட்டமானது “ரமழானில் தவிக்கும் குடும்பங்களைத் தத்தெடுப்போம்” எனும் செயற்றிட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சம்மாந்துறை, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, நாவிதன்வெளி போன்ற அம்பாறை மாவட்ட தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களை நோன்பை முன்னிட்டு தத்தெடுத்து இதுவரை பலகுடும்பங்களுக்கு இவ்வுதவி செய்யப்பட்டுள்ளது. பிரதேசவாதங்கள் கடந்து முகப்புத்தக நண்பர்கள், சமூக நல அமைப்புக்களை கொண்டு மேற்படி உதவிகள் பயனாளிகளை சென்றடைகிறது. ஒரு நாளைக்கு 500 ரூபாய் விதம் 30 நாட்களுக்கும் 15000 ரூபாய் இத்திட்டத்தின் ஊடாக ஒரு குடும்பத்தை சென்றடைகிறது.
மேலும் பலரதும் நேரடி கண்காணிப்பில் நடைபெற்றுவரும் “ரமழானில் தவிக்கும் குடும்பங்களைத் தத்தெடுப்போம்” எனும் செயற்றிட்டம் அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் விஸ்தரிப்பு செய்யப்பட்டு ஏழைகளுக்கு தம்மால் முடியுமான உதவிங்களை வழங்க தயாராக இருப்பதாக றிசாத் ஷரீப் நம்பிக்கை தெரிவித்தார்.