தொழில் கேட்டு பட்டதாரிகள் ஊர்வலம் செல்வதற்குப் பதிலாக, தொழில்கள் அவர்களைத் தேடி வரும் வகையலான கல்வி முறைமையே எமது நாட்டுக்கு தேவையாகும் .இவ்வாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் கடந்த சனிக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்தாராய்வின் போது முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் ஆலோசனை வழங்கினார். .
பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகள் இலகுவாகத் தொழில்களைத் தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை மறுசீரமைத்துத் தயாரிக்க வேண்டும்.
பல்கலைக்கழக கல்வி பற்றி எத்தகைய வியாக்கியானங்கள் இருக்கின்ற போதும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் இளைஞர் மற்றும்.யுவதிகள் தமக்கான தொழில் ஒன்றைத் தேடிக்கொள்ள முடியாது இருக்குமாயின் - அது சரியான கல்வி முறையாக இருக்க முடியாது.
பட்டதாரிகள் தொழில் கேட்டு ஊர்வலமும் ஆர்பாட்டமும் செல்வதற்கு பதிலாக தொழில்கள் அவர்களை தேடி வரும் கல்வி முறைமையே தேவையாகும்.
கொரணா வைரசு தாக்கம் தொடர்பில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே மீண்டும் திறக்கப்பட வேண்டும் .
நாட்டில் ஊடங்கு அமுலில் உள்ள போது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக் கல்வி முறைமையை மேலும் மேம்படுத்துவதற்கு இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். எதிர்காலத்தில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தில் 30 வீதத்தினரையாவது இணைய வழிக் கல்விக்கு உட்படுத்த வேண்டும் . வெளிநாடுகளில் கல்வி கற்றுவந்த ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களை கொவிட் நோய்த்தொற்று பரவல் காரணமாக மீண்டும் நாட்டுக்குத் திரும்பவும் அழைத்து வர வேண்டியிருந்தது. இந்த நிலமை மாற்றப்பட்டு நமது நாட்டிலேயே உயர்கல்வியினை தொடர வாய்ப்புகளும் வசதிகளும் வழங்கப்பட வேண்டும். இவ்வளவு அதிகமான மாணவர்கள் கல்வியைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வது நல்ல அறிகுறியல்ல .
இவர்களது கல்விக்காக அதிகளவு அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்குச் செல்கின்றது. பிள்ளைகள் தம்மை விட்டும் தூரமாகியிருப்பது பெற்றோருக்கும் மன அழுத்தத்தை தருவதாக உள்ளது.
இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், பல்கலைக்கழக கல்வி பல்வகைப்படுத்தப்பட வேண்டும். தொடர்பாடல் தொழிநுட்பம் உள்ளிட்ட புதிய தொழிநுட்ப அறிவு, தாதி தொழில், சுற்றுலா, ஆசிரியர் தொழில் போன்ற துறைகளில் பட்டப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்'
பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு குறைந்த செலவில் புதிய கணினிப் பாகங்களை ஒன்றிணைக்கும் இயலுமை குறித்தும் ஆர7ாய வேண்டியுள்ளது.
பல்கலைக்கழக பொறியியல் பீடம் உள்ளிட்ட இதுபோன்ற பாட அறிவுடன் கூடியவர்களால் இதற்கு உதவ முடியும். எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்குப் பிரவேசிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கணினியொன்றை பெற்றுக்கொள்ளும் வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும். உயர் தர பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் தகைமை பெறும் அனைவருக்கும் பல்கலைக்கழகங்களுக்குள் அவர்கள் நுழைய முன்னதாகவே, வீடுகளில் இருந்தபடி ஆங்கிலம் மற்றும் கணினிக் கல்வியைப் பெற்றுக்கொள்ளத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் .
பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கப்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை 7500
இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.