அனைத்துப் போரட்டங்களின் பின்னணியே தமிழ் மக்களின் இன்றைய அரசியல்--கலாநிதி ஜனகன்..!

றிஸ்கான் முகம்மட்-

“அனைத்துப் போராட்டங்களினது வடிவங்கள் வேறுபட்டிருந்தாலும், நோக்கம் என்பது தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் அவர்களின் சுய கௌரவம் என்பதை உணர்வதோடு, போராடியவர்களின் ஆயுதக் கலாசாரம் தவறு என்று கூறுபவர்கள் கூட, அவர்களின் எண்ணம் ‘தமிழ் மக்களின் சுய கௌரவம்’ தான் என்பதை ஏற்றுக்கொண்டு, அவர்களின் உயிர்த் தியாகங்களை மதித்து அரசியல் செயற்பாடுகளைச் செய்வதே சாலச்சிறந்தது” என, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் கொழும்பு மாவட்ட தமிழர் வேட்பாளருமான கலாநிதி வி. ஜனகன், வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் சர்ச்சைக்குரிய நேர்காணல் தொடர்பில் கலாநிதி ஜனகன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளவையாவன:


“தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்கிறாரா அல்லது இல்லையா என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. ஆனால், இன்று தமிழர்கள் தங்களுடைய அரசியல் தளத்தை வரையறுக்கிறார்கள் என்றால் அதற்கு பின்னணியில் பல போராட்டங்கள் வலுப்படுத்தியுள்ளன என்பதே உண்மை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

“விடுதலைப் புலிகள் இருந்திருக்கும் காலத்தில் செயற்பட்ட அரசியல் தலைவர்களிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்விகளை, இன்று விடுதலைப் புலிகள் இல்லாது இருக்கும் சந்தர்ப்பத்தில், அக்கால கட்டத்துக்குப் பிறகு தமிழர் அரசியல் தளத்தில் இருப்பவரை நோக்கிப் பாய்ச்சியிருப்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது. JVP போராட்டத்தில், அதுவும் நாட்டின் ஆட்சியைக் கவிழ்க்கக் கூடிய போராட்டமாக இருந்த வேளையில், அந்த இயக்கத்துடன் தொடர்புபட்டு தொழிற்பட்டவர்களின் கொள்கைகளையும் எண்ணங்களையும் ஒப்பிடுகையில், அதற்குப் பிறகு அவ்வியக்கம் ஜனநாயகப் பாதைக்கு வந்த பிறகு அதனை ஏற்று, அக் கட்சியின் செயற்பாட்டாளர்களின் கொள்கைகளிலும் எண்ணங்களிலும் வேறுபடுகள் இருக்கும். இப்போது இருக்கும் JVP யினரைப் பார்த்து அக்கால JVP யினரை ஏற்றுக்கொள்கிறீர்களா என யாராவது கேட்கிறார்களா? அத்தகைய சித்தாந்தத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

“தமிழரின் பல்வேறு வகையான போராட்டங்கள் தான் சர்வதேசத்துக்கு தமிழரின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு வழிவகுத்தன. வடக்கு, கிழக்குகளில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம், தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் போராட்டம், வடக்கு - கிழக்கு பிரதேசத்துக்கு வெளியில் எமது தலைவர் மனோ கணேசன், மறைந்த ரவிராஜ், மறைந்த மகேஸ்வரன் போன்றோர்களின் பல்வேறு அகிம்சை வழிப் போராட்டங்கள், மலையகத் தமிழ் தலைவர்களின் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் என அனைத்துப் போராட்டங்களின் தொடர்ச்சியே இன்று தமிழர்களின் அரசியல் யாதார்த்தத்தை சர்வதேசத்தினாலும் தென்னிலங்கை பேரினவாத அரசியல் தலைவர்களும் செவிமடுக்க வேண்டும் என்ற நிலைக்கு உருவாக்கியுள்ளது.

“ஆகவே, அனைத்துப் போராட்டங்களினது வடிவங்கள் வேறுபட்டிருந்தாலும், நோக்கம் என்பது தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் அவர்களின் சுய கௌரவம் என்பதே ஆகும். இதனை அனைத்துத் தமிழ்த் தலைவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். போராடியவர்களின் ஆயுதக் கலாசாரம் தவறு என்று கூறுபவர்கள் கூட, அவர்களின் எண்ணம் ‘தமிழ் மக்களின் சுய கௌரவம்’ தான் என்பதை ஏற்றுக்கொண்டு, அவர்களின் உயிர்த் தியாகங்களை மதித்து அரசியல் செயற்பாடுகளைச் செய்வதே சாலச்சிறந்தது.

“இன்று இருக்கும் JVP யினர் கூட அந்தக் கால JVP யினரின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் மக்கள் மத்தியில் விதைக்க முற்பட்ட கருப்பொருளை இவர்கள் ஏற்றபடியால் தான் இன்றுவரையும் அந்த இயக்கத்தின் பெயரில் அரசியல் கட்சியை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை” என கலாநிதி ஜனகன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -