பரீட்சைப் புள்ளிப் பகுப்பாய்வின் போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் சில வலயம் மாறி சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை உரிய வலயங்களுக்குள் சேர்க்க ஆவண செய்யுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கிண்ணியா கிழக்குவள அபிவிருத்தி மையம் (EFFORD) இக்கோரிக்கையை விடுத்துள்ளது.
இக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
பரீட்சைப் புள்ளிப் பகுப்பாய்வின் போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சில பாடசாலைகள் வலயங்கள் மாறி பட்டியல் படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு கிண்ணியா வலயப் பாடசாலைகள் சில மூதூர் வலயத்தினுள் சேர்க்கப்பட்டுள்ளன. திருகோணமலை வலயப் பாடசாலைகள் சில கிண்ணியா வலயத்தினுள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனால் வலயங்கள் தொடர்பான சரியான பகுப்பாய்வினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. மாகாண மற்றும் மாவட்ட பகுப்பாய்வுகளில் மாற்றம் இல்லாத போதிலும் வலயங்கள் தொடர்பான பகுப்பாய்வுகளில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே, வலயம் மாறியுள்ள பாடசாலைகளை உரிய வலயங்களுக்குள் சேர்த்து எதிர்காலத்தில் பகுப்பாய்வு செய்ய ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அக்கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.