கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் பொருட்டு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஆயுர்வேத பானம் தயாரிப்பதற்கான ஒரு தொகை மூலிகை மருந்துப் பொதிகள் எம்.எப்.சி.டி. நிறுவனத்தினால் அக்கரைப்பற்று அரச யூனானி மருந்து உற்பத்தி பிரிவுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இப்பொதிகளை கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட திட்ட முகாமையாளர் எஸ்.எம்.இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யூனானி மருந்து உற்பத்திப் பிரிவு மருத்துவ பொறுப்பதிகாரி டொக்டர் யூ.எல்.நிஹாயா, கல்முனைப் பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளர் எம்.ஏ.நபில், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.பி.எம்.றஜீஸ் உட்பட யூனானி மருந்து உற்பத்திப் பிரிவின் மருத்துவ உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கரிசனையுடன் அரச சார்பற்ற நிறுவனமான எம்.எப்.சி.டி. முன்னெடுத்துள்ள இவ்வுதவித் திட்டத்திற்காக யூனானி மருத்துவ அதிகாரிகள் இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்