இந்நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் கலாநிதி சுக்ரி அவர்கள் பங்குபற்றிய இறுதிப் பிரசித்த நிகழ்வு இந்நூல் வெளியிடே என்று குறிப்பிட்டார். அத்தோடு அவரது உரைச் சுருக்கத்தினையும் ஞாபகப்படுத்தினார்.
''சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும்' என்ற இந்த நூல் வெளியீடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். சிறுபான்மை சமூகங்கள் தத்தமது சமூகங்களில் வரலாற்று அறிவும் உணர்வும் மிக்கவர்களாக திகழவேண்டும். இல்லாவிட்டால் அந்த சமூகங்களின் இருப்பு கேள்விக்குரியதாகிவிடும். சமூகங்கள் தமது தனித்துவத்தைப் பேணுவதற்கு வரலாற்றுப் பதிவு முக்கியமாகும். ஆகவேதான் ஒவ்வொரு சமூகமும் வரலாற்று அறிவும் உணர்வும் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் - பல்லின நாட்டில் வாழும் நாம் நமது கலை, கலாசார தொகுப்புக்களை வெளியிடவும் - பாதுகாக்கவும் வேண்டும்.
களுத்துறை, மாத்தறை, மாத்தளை, அம்பாரை முதலான பிரதேசங்களின் வரலாற்றுத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. அந்தவகையில் சம்மாந்துறை வரலாற்று நூல் பெரிதும் பாராட்டப்படவேண்டியது. அதன் பதிப்பாசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்வை நன்றிப் பெருக்குடன் நோக்க வேண்டும். ஊரின் எல்லாப் பண்புகளையும் இந்நூல் வெளிப்படுத்துகின்றது. சம்மாந்துறை மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியம் முதலானவற்றை அறிந்து கொள்வதற்கான அரிய நூல் இதுவாகும்' என்று சுக்ரி அவர்கள் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
இவ்வாறு சுக்ரி அவர்களின் இறுதித் தாகம் நமது சமூகத்தின் இருப்புக்கு நமது வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதோடு அந்த உணர்வும் மிக்கவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதுமாகும்.
சுக்ரி போன்ற மிக நிதானமான வரலாற்று அறிஞர்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். எல்லா சமூகங்களோடும் இணைந்து வாழ்ந்த சமகால முஸ்லிம் பேரறிஞர்களில் ஒருவர் அவர்.
பொதுவாகவே, முஸ்லிம் அறிஞர்கள் நிதானமிக்கவர்களாகவே தமது கருத்துக்களை வெளியிடுகின்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் முஸ்லிம் அறிஞர்கள் அல்லது சமூகம் எவ்வாறு தீவிரவாதத்தை நேசிப்பவர்களாக இருக்க முடியும். அல்லது அதன் வழியே தமது நிறுவனங்களை அல்லது இயக்கங்களை கொண்டு செல்கின்றவர்களாக ஆக முடியும் என்றும் றமீஸ் அப்துல்லாஹ் கேள்வி எழுப்பினார்.
எனவேதான் இந்த நாட்டின் சூழ்நிலையின் கைதிகளாகப்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு விடிவு வேண்டும். முஸ்லிம்களின் - இஸ்லாத்தின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நமது நாட்டின் தலைவர்கள், மன்னராட்சிக் காலத்திலிருந்து முஸ்லிம்களை அரவணைத்தது போல அரவணைத்து வாழ்வதற்குரிய வழியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்தப் பிரார்த்தனை நிகழ்வில் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வின் இறுதியில் சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் எழுதிய எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட்டதோடு சுக்ரி அவர்களுக்கும் மறைந்த ஏனைய எழுத்தாளர்களுக்குமான பிரார்த்தனையும் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை அதிதியாக சம்மாந்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ ஏ.எம்.எம் நௌசாட் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (கலாநிதி சுக்ரி அவர்களின் தலைமை உரையின் பதிவினை பகிர்ந்து கொண்ட பத்திரிகையாளர் ஏ.எல்.எம் சலீம் அவர்களுக்கு நன்றி)