நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்கள் திடீரென பழுதாவதினால் திருத்தப்பணி செய்ய முடியாமல் பயணிகளும், வாகன சாரதிகளும் மிகப்பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்த அசௌகரியங்களை போக்கும் விதமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மாகாணங்களின் வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என்பன இணைந்தோ அல்லது தனித்தோ நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என அல்- மீஸான் பௌண்டசனின் தவிசாளர் யு.எல்.என். ஹுதா தெரிவித்தார்.
அல்- மீஸான் பௌண்டசனின் வருடாந்த அமர்வு கல்முனையில் (11) நடைபெற்றபோது, அங்கு உரையாற்றிய அவர் மேலும் தனதுரையின் போது,
காட்டுப்பகுதிகளில் வாகனங்கள் திடீரென பழுதாகி நடுவீதியில் உதவுவாரில்லாமல் மணிக்கணக்கில் நிற்கும் சாரதிகளினதும் பயணிகளினதும் நிலை பயங்கரமானதாகவே உள்ளது. வாகனம் வைத்திருக்கும் அல்லது வாகனத்தில் பயணித்த அனுபவமிருக்கும் எல்லோருக்கும் இந்த நிலை நன்றாக விளங்கும். இந்த பயணத்தின் போது அவசர வேலைநிமிர்த்தம் பயணிப்போரின் நிலை என்ன என்பதை சிந்தித்தால் அந்த பிரச்சினையின் ஆழம் நமக்கு நன்றாக விளங்கும்.
விபத்துக்களுக்கு உதவ வைத்தியசாலைகளிலும், பொலிஸ் நிலையங்களிலும் அவசர அம்புலன்ஸ் வண்டி இருப்பது போன்று இவ்வாறான நிலைக்கு உதவ பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் அல்லது உள்ளுராட்சி மன்றங்களில் இவ்வாறான அவசர தேவைக்கு உதவும் திருத்தப்பணி அவசர உதவியாளர் தொகுதியை உருவாக்க முடியும். அதற்கான ஆளணியாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 1 லட்சம் வேலைவாய்ப்பில் இத்துறையில் அனுபவமும் தேர்ச்சியும் பெற்றவர்களை நியமிக்க முடியும். அதற்காக குறித்த ஒரு தொகையை சேவையை கட்டணமாக அரசாங்கம் வசூலித்தாலும் சாரதிகள் அதை வழங்க முன்வருவார்கள். இதனால் அரசுக்கு வருமானம், தொழிலற்றவர்களுக்கு தொழில், சாரதிகளுக்கு பாதுகாப்பான இலக்குப்பயணம் ஆகிய நன்மைகள் கிட்டுகின்றது.
நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திலும் நாட்டு மக்களின் அபிலாஷைகளிலும் எப்போதும் கரிசனை செலுத்தும் எமது ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், ஆளுநர்கள் இந்த பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.
0 comments :
Post a Comment