மினுவாங்கொடை நிருபர் -
மக்களின் இயலாத் தன்மையையும் வறுமை நிலையையும் கருத்திற்கொண்டு, வை.எம்.எம்.ஏ. பேரவை பல வழிகளிலும் உதவி உபகாரங்களைப் புரிந்து வருகிறது. இன, மத, மொழி பேதமின்றி அவைகளுக்கு அப்பால் நின்று சகல சமூகத்தவர்களுக்கும் அவர்களின் தேவையறிந்து உடனடி நிவாரணங்களை வழங்குவதிலும் எமது பேரவை கரிசனை காட்டிக்கொண்டிருக்கிறது என, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி தெரிவித்தார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஊடாக நாடளாவிய ரீதியில் விசேட தேவையுடையோருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன, மத, மொழி பேதமின்றி மூவின விசேட தேவையுள்ளவர்களுக்கு, வை.எம்.எம்.ஏ. கிளைகளின் ஊடாக, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியவாறு இவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆயிரம் சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் இச்செயற்திட்டத்தை, தேசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான தவிசாளர் கே.என். டீன் வழிகாட்டலில், கொழும்பு - தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள பேரவையின் தலைமையகத்திலிருந்து ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவி்க்கையில்,
கொவிட் - 19 (கொரோனா) தொற்று ஏற்பட்டு மக்கள் அவதியுற்று அல்லல்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் கூட, எமது பேரவைக்குக் கிடைத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளின் ஊடாக அவர்களுக்கு பாரிய சேவைகளைச் செய்யக் கிடைத்தமையையும் இங்கு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.
இன்றும்கூட வை.எம்.எம்.ஏ. பேரவை மிகச்சிறப்பான நன்மை தரும் பயன்மிகு கைங்கரியமொன்றில் இறங்கியுள்ளது. இலங்கையெங்கும் உள்ள விசேட தேவையுடையவர்களைத் தேடி, அவர்களுக்காக சக்கர நாற்காலிகளை இலவசமாக வழங்கும் அந்த மகத்தான பணியை இறைவன் அருளால் இன்று ஆரம்பித்திருக்கின்றோம் என்ற நற்செய்தியையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.
இந்நிகழ்வில், தேசிய பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாபிர் சவாத், தேசிய பொதுப்பொருளாளர் இஹ்சான் ஹமீத் உள்ளிட்ட மாவட்டப் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment