திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி, மூதூர் 64ஆம் கட்டை பகுதியிலுள்ள காணிகளை அளப்பதற்கு நில அளவையாளர்கள் இன்று திங்கட்கிழமை (05) வருகை தந்த போது பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையால் பதட்ட நிலைமை ஏற்பட்டுள்ளது.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64 ஆம் கட்டை குட்டியாராம விஹாரைக்கு அருகிலுள்ள காணிகளை அளப்பதற்கு முயற்சித்தபோதே பதட்ட நிலைமை உருவானது.
காணிகளை அளக்கும் போது மேற்படி விஹாரைக்கு அருகே உள்ள சிறுபான்மை மக்களுடைய காணிகளும் உள்வாங்கப்பட்டதாகவும் அதனால் பொதுமக்களின் காணிகள் விஹாரைக்குச் சொந்தமாக்கப்படுவதாகவும் அதனை தடுக்கும் முகமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, குட்டியாராம விகாரைக்கு அருகில் அதிகளவில் சிறுபான்மை மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்குச் சொந்தமான காணிகள் அப்பகுதியில் இருப்பதாகவும் நில அளவையாளர்கள் விஹாரையை நில அளவை செய்வதனூடாக பொதுமக்களுடைய காணிகளும் பெறப்படுமென மக்கள் சுட்டிக்காட்டினர்.
அக்காணிகளை மீட்பதற்காக தங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
நில அளவையாளர்கள் அப்பகுதியைச் சுற்றி அளக்க முற்பட்ட போதும் பொதுமக்களுக்கும் நில அளவையாளர்களுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்படுவதைத் தடுக்கும் முகமாக பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment