இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது தடவையாகத் தாக்கியபோதும் இதுவரை உயிரிழப்புகள் ஏற்படுத்தவில்லை.
கொரோனா தொற்று இரண்டாவது பரவலின்போது இரண்டு வாரங்களில் சுமார் ஆயிரத்து 600இற்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இந்த நிலைமையானது ஆறுதல் தருவதாக இலங்கைச் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இருந்து கடந்த மாத இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா அருகேயுள்ள கொழும்பு மாவட்டத்திலும் பலரைத் தாக்கியுள்ளது.
இதுவரை 21 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளதாக தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இலங்கை மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பாதுகாப்பான பொது நடைமுறைகள், சமூகப் பழக்கவழக்கங்கள் சிறப்பாக இருந்ததன் காரணத்தினால், சமூகத் தொற்றாக மாறி மக்களிடையே வேகமாகப் பரவிய கொரோனா வைரஸினால் உயிழப்புகளை ஏற்படுத்த முடியவில்லையென இலங்கை மருத்துவர் சங்கத்தின் அதிகாரியொருவர் கூறியுள்ளார். இது ஒரு வகையில் ஆறுதலான தகவல் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் பரவிய கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் மூன்று பேர் மாத்திரமே உயிரிழந்தனர். ஏற்கனவே வேறு நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகி உடல் பலவீனமானமாகியிருந்தாலேயே கொரோனா தொற்று ஏற்பட்டதும் அவர்கள் உயிரிழக்க நேரிட்டது.
சுகாதாரத் திணைக்களம். மருத்துவர் சங்கம், சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள். மற்றும் பொது அமைப்புகள் மேற்கொண்ட துரிதமான கடும் முயற்சியின் காரணமாகவும் கொனோரா தொற்றைத் தடுக்கக் கூடியதாக இருந்ததாக களப் பணியில் ஈடுபடும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய, மேற்கத்தைய நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போன்று இதுவரையும் இலங்கையில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
ஆனாலும் எதிர்காலத்தில் மேலும் கடுமையாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏனெனில் ஐரோப்பிய. மேற்கத்தைய நாடுகளைப் போன்று இலங்கையில் சுகாதாரக் கட்டமைப்புகள் பலமானதாக இல்லை. அதாவது போதிய மருத்துவ மனைகள், மருத்துவ வசதிகள் எதுவுமே போதியதாக இல்லை. மருத்துவனை வசதிகளை உடனடியாக உருவாக்கக்கூடிய பொறிமுறைகளும் இல்லை.
இதனால் முடிந்தவரை நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதும், மக்களின் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளுமே முக்கியதானதாக இருக்க வேண்டும்.
வடக்குக் கிழக்கு உள்ளிடட இலங்கையைப் பொறுத்தவரை மக்களின் சுயபாதுகாப்பு முயற்சிகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் கொரோனா பரவல் காலத்தில் சிறப்பாகவே இருப்பதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.
0 comments :
Post a Comment