நான், அரசியல்வாதி என்பதை விட ஒரு மனித உரிமை போராளி. வெள்ளை வேன் கடத்தல், சட்டத்துக்கு அப்பாலான கடத்தல் கொலை, கப்பம், அடாத்தான கைது ஆகியவற்றுக்கு எதிராக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நான் போராடியுள்ளேன்.
இளையோர் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பட கூடாது. குற்ற செயல்களில் ஈடுபடும், இளையோருக்கு திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது என் பொதுவான கொள்கை நிலைப்பாடு. துமிந்த சில்வா, ஏற்கனவே ஐந்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் அங்கே சீர்திருத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என நம்புகிறேன். அவருக்கு திருந்தி, தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நான் எண்ணுகிறேன்.
அதேபோல், அரசியல் சார்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட தமிழ் கைதிகளும் சிறைகளில் உள்ளார்கள். இளைஞர்களாக இருக்கும்போது கைது செய்யப்பட்டு, தம் வாழ்நாளில் கணிசமான காலத்தை இவர்கள் சிறையில் கழித்துள்ளார்கள். அவர்களில், தீர்ப்பு வழங்கப்பட்டவர்களும், விசாரணை கைதிகளும், வழக்குகளை எதிர்நோக்குகின்றவர்களும் உள்ளார்கள். அவர்களும் சீர்திருந்தி, புனர்வாழ்வு பெற்று, சமூகத்துக்குள் சென்று, தம் குடும்பங்களுடன், மனைவி மக்களுடன் வாழ விடுதலை வழங்கப்பட வேண்டும் எனவும் கோருகிறேன்.
யார் என்ன சொன்னாலும், பெரும்பான்மை இனத்தை சார்ந்த தீர்ப்பு வழங்கப்பட்ட மற்றும் விசாரணை கைதிகளுக்கான பொது மன்னிப்பு, விடுதலை என்பவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை மனித உரிமையாளர்களும், சர்வதேச சமூகமும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கின்றன.
எனவே இவ்விவகாரம், தமிழ் கைதிகளின் பிரச்சினையையும் தேசிய அரங்குக்கு கட்டாயமாக கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கின்றேன். இந்நிலையில், தமிழ் அரசியல்வாதிகளும், மனித உரிமையாளர்களும், இதை பயன்படுத்தி, நீண்டகால, தமிழ் கைதிகளின் பிரச்சினையையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கு எப்போதும் போல் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.
0 comments :
Post a Comment