பொதுவில் பிரதேசம், கிராம சேவகர் பிரிவு 27இல் ஏர்டெல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த தொலைத் தொடர்பு கோபுர நிர்மாணப் பணிகளை இடை நிறுத்துமாறு பொதுவில் மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுவில் பெரிய ஜும்மா பள்ளிவாயல் தலைவர் வைத்தியர் மீரா மொஹைதீன் முஹம்மத் சமீம் என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கை இன்று (23.10.2020)திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி குறித்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு வந்த கொண்டை மௌலானா பள்ளிவாயல் என அறியப்படும் ஸியாரம் உள்ள காணியின் உரிமை தொடர்பில் சர்ச்சை நிலவி வருகின்றது.
குறித்த ஸியாரம் அமையப் பெற்றுள்ள காணியானது, பொதுவில் பெரிய ஜும்மா பள்ளிவாயலுக்கு வக்பு செய்யப்பட்டது. பள்ளிவாயலின் அனுமதி பெறப்படாமல் குறித்து நிர்மாணப்பணி இடம்பெற்று வருவதாக பள்ளிவாயல் நிருவாகம் குற்றம் சாட்டி வருகின்றது.
குறித்த காணிக்கு உரிமை கோரிவரும் பிரதான எதிராளியிடம், தமக்கான ஆதாரங்களை எதிர்வரும் 06.11.2020ம் திகதி மன்றில் சமர்பிக்குமாறும், அது வரை குறித்த எதிராளி அக்காணிக்குள் உட்செல்லவோ அல்லது தொலைத்தொடர்பு கோபுரங்களையோ அல்லது வேறு ஏதாவது கட்டுமானங்களையோ கட்டக் கூடாது என நீதி மன்ற இடைக்கால தடை உத்தரவு அறிவித்தலில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மக்கள் கணிசமாக செறிந்து வாழும் பிரதேசத்தில் தொலைத் தொடர்பு கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வந்ததால் அப்பகுதி மக்களும் தங்களது தொடர்ந்த எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
நீதிமன்றின் இடைக்கால தடை உத்தரவை அடுத்து, அங்கு நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு குறித்த காணியில் இருந்து வெளியேறியதையும் அவதானிக்க முடிந்தது.
0 comments :
Post a Comment