ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறுவதுபோல ஆளுங்கட்சி பக்கமாக அமரப் போவதில்லை என்று, 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
20ஆவது திருத்த யோசனை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் உட்பட 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திருத்த யோசனைக்கு ஆதரவாகவாக்களித்த படியினால், அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள சூழல் அமைந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தெளபீக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான இஸாக் ரஹ்மான், அலிசப்ரி, முஸர்ரப் ஆகிய 07 உறுப்பினர்கள் 20ஆவது திருத்த யோசனைக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தவர்கள்.
இவர்கள் தவிர, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் டயனா கமகே, தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர் அரவிந்தகுமார் உள்ளிட்டவர்களும் 20ஐ ஆதரித்து வாக்களித்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களாவர்.
இவர்களை கூட்டணியிலிருந்து வெளியேற்றுவதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை எதிர்கட்சித் தலைவரான கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்றைய தினம் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுமாத்திரமன்றி, குறித்த 09 உறுப்பினர்களுக்கும் ஆளுங்கட்சி தரப்பில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் அந்தக் கடிதத்தில் சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து சிங்கள ஊடக செய்திப் பிரிவு ஒன்று, நாடாளுமன்ற உறுப்பினர் தவ்பீக்குடன் தொடர்புகொண்டு வினவியபோது, இதற்குபதிலளித்த அவர், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறுவதுபோல ஆளுங்கட்சி பக்கமாக நாடாளுமன்றத்தில் அமரமுடியாது என்று தெரிவித்தார்.
குறிப்பாக முஸ்லிம்கள் உட்பட தமிழ் பேசும் மக்களின் எதிர்கால நலனுக்காகவே 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்ததாக தெரிவித்த அவர், எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சு நடத்தவும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அதேவேளை, அமைச்சுப் பதவிகள் பெறப்போவதாக வெளியாகிவரும் விமர்சனங்கள் குறித்து வினவியபோது, அதனை நேரடியாக அவர் மறுப்பதிலிருந்து தவிர்த்துக் கொண்டார்.
விசேடமாக அமைச்சுப் பதவிகளை பெறுவதா இல்லையா என்பதற்கு காலமே பதில் சொல்லும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இஸாக் ரஹ்மான் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment