J.f.காமிலா பேகம்-
அரசியலமைப்பில் உள்ள உரிமையை மக்களுக்கு வழங்கியதால் என்னை சிறைதள்ளியிருக்கிறது அரசாங்கம் என்று , ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிஸாட் பதியூதீன் நாடாளுமன்றத்தில் இன்று ஆவேசமாக உரையாற்றினார்.
கடந்த 15 நாட்களாக சிறையிலிருந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த அவர் சபையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்குரிமை கொடுத்ததால் சிறை தள்ளப்பட்டேன். 30 வருடமாக அவர்கள் வாக்களிக்க சென்றார்கள். ஆனால் இம்முறை மட்டும் அதனை பெரிதுபடுத்தி அதற்குப் பொறுப்பான அமைச்சர் என்பதால் என்னை சிறைதள்ளியிருக்கின்றார்கள். எனக்கு ஏற்பட்ட அநியாயத்தை இறைவனிடம் கையளித்திருக்கின்றேன்.
‘சொந்த மண்ணில் வாக்களிக்க வேண்டுமென அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியபோது, அதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பணித்ததுடன் அப்போதைய நிதியமைச்சர் மங்களவிடம் அனுமதிகேட்டபோது அனுமதித்திருந்தார். அந்த இரு கடிதங்களையும், பணிப்பாளர், செயலாளர்களுக்கு அனுப்பினேன். இவற்றை தவிர வேறெந்த தவறையும் செய்யாமல் 15 நாட்களாக சிறைதள்ளப்பட்டிருக்கின்றேன்.
‘நாட்டில் நீதி நியாயம் இருப்பதால் எனக்கு தீர்வுகிடைக்குமென எதிர்பார்க்கின்றேன் என்று முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீன் தெரிவித்தார்.
‘அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்படும் மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சாதி, சமயம், இனம் பால் அரசியல் என்பதால் அவர்களுடைய உரிமை பறிக்கப்படக்கூடாது.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரிடம் ஒரு கோரிக்கை முன்வைக்கின்றேன். 2020 மார்ச்சில் இறந்த உடலினால் தொற்று ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்காமல் புதைக்கப்பட அனுமதிக்க வேண்டும். கொரோனாவுக்கு அச்சமில்லாமல், மக்கள் வைத்தியசாலைக்கு செல்லவே அஞ்சுகின்றார்கள்’ என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment