இந்த அரசாங்கம் முன்வைத்துள்ள பட்ஜெட்டில் நாட்டினை மீட்டெடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் வகுக்கவில்லை ஆனால் கடன்களை மேலும் அதிகரிக்கும் கொள்கைகளையே அரசாங்கம் உருவாக்கியுள்ளது. 2020-2021ம் ஆண்டுக்காக 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாவை இன்னும் கடனாக பெற்றுக்கொண்டு நாட்டினை மேலும் கடன் நெருக்கடியில் தள்ளவே தீர்மானித்துள்ளதாக JVPயின் தலைவர் அனுரகுமார திசாநாயக பாரளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று 2021ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீடு மீதான 2ம் நாள் இறுதி விவாதத்தில் உரையாற்றுகையில்:-
முன்னர் ஆட்சி செய்தவர்கள் இப்போது ஆட்சி செய்பவர்களையும், இப்போது ஆட்சி செய்பவர்கள் முன்னர் ஆட்சி செய்தவர்களையும் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் உண்மையில் இவர்கள் அனைவராலும் நீண்டகாலமாக நாட்டின் பொருளாதாரமே நாசமாக்கப்பட்டுள்ளது. 2 சாரதிகள் மாறி மாறி ஒரே பாதையில் பயணிக்கும் பஸ்ஸையே ஓட்டுகின்றனர். சாரதிகள் அவ்வப்போது மாறினாலும், பஸ்ஸோ பாதையோ மாறவே இல்லை. எமது நாட்டின் சகல துறையும் இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.
எமது நாட்டின் தேசிய உற்பத்திகள் முழுமையாக அழிக்கப்பட்டு அனைத்துமே வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தேசிய வருமானம் 24% வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் எமது நாட்டின் செலவுகளோ அளவுக்கு அதிகமாகியுள்ளன.
வருமானத்தை விடவும் செலவு 68% இன்று அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் 52 நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் இன்றும் நட்டத்திலேயே இயங்கிக் கொண்டுள்ளன. இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் அரச நிறுவனங்கள் கண்டுள்ள நஷ்டம் 80 கோடி ரூபாவாகும். அடுத்த நான்கு மாதங்களையும் கருத்தில் கொண்டால் 12,000 கோடி ரூபாயை அண்மித்த தொகையை காண்பிக்கும்.
3 அல்லது 4 மாதங்களில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி காண்கின்றது என்றால், இந் நாட்டில் 70 வருட கால பொருளாதார கொள்கை என்னவென்ற கேள்வியே எழுகின்றது. பாத்திரத்தில் ஒன்றுமே இல்லாத நிலையில் தான் வறுமை வரும் இவ் உதாரணத்தை இதற்கு பொருத்திப்பாருங்கள்.
அரச நிறுவனங்களை மீட்டெடுக்க அரசாங்கம் எந்தவொரு திட்டத்தையும் வகுக்கவில்லை, அதேபோல் ஏற்றுமதி - இறக்குமதியில் $8 Billion இடைவெளி காணப்படுகின்றது. நாட்டின் ஏற்றுமதி குறைவடைந்துள்ளது. சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மூலமாக வரும் வருமானம் குறைவடைந்துள்ளது. இப்போதே வெளிநாட்டிலிருந்த 40 ஆயிரம் பேர் தொழிலை கைவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.
அதேபோல் நாட்டின் கடன் நெருக்கடி பிரதான நெருக்கடியாக மாறியுள்ளது. நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் அனைத்தும் இறுதியாக கடன் நெருக்கடியையே கொண்டு சேர்க்கும். 2013ம் ஆண்டில் எமது நாட்டின் கடன் தொகை 13 லட்சம் கோடியாக இருந்தது.
2020ம் ஆண்டு பெற்றுக் கொண்டுள்ள கடனுடன் 15 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்த வருடத்துக்கான கடன்களையும் இணைத்துப் பார்த்தால் இந்த கடன்தொகை எம்மால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையே ஏற்படும். 2020ம் ஆண்டு பட்ஜெட் திட்ட கணக்குகள் அனைத்துமே தவறானது. 2020-2021ம் ஆண்டுக்காக 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாவை கடனாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இந்த நாட்டின் மொத்த வருமானம் 8,000 கோடியாக உள்ள நிலையில் 6 லட்சம் கோடியை கடனாக பெறுகிறோம்.
2020ம் ஆண்டிற்காக ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 400 கோடி ரூபாவை கடன் மற்றும் வட்டியாக செலுத்தப்படவுள்ளது. ஆனால் ஆண்டுக்கான வருமானம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 500 கோடி ரூபாவாகும். வருமானத்தை விடவும் கடன்களே அதிகரித்துள்ளன. 2021ம் ஆண்டில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 700 கோடி ரூபாவை கடன் மற்றும் வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் வருடத்துக்கான வருமானமாக ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 400 கோடி ரூபாவே கிடைக்கும்.
ஆகவே அரச வருமானமே கடன்களை செலுத்தவே போதுமானதாக இல்லை. கடன்களை மாத்திரமே செலுத்தினால் ஏனைய துறைகளை எவ்வாறு மீட்டெடுப்பது. எமது நாட்டின் மொத்த கடன்களில் 44% சர்வதேச கடன்களாகும். இவற்றை விரைவாக செலுத்தியாக வேண்டும். எனவே நாடு பாரிய கடன் நெருக்கடியில் இன்று வீழ்ந்துள்ளது. அரச நிறுவனங்களின் கடன் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாவாகும். திறைசேரி இன்று 50 ஆயிரம் கோடி வங்கி மிகைப்பற்றில் செல்லுகின்றது. நாட்டின் பிரதான கடனாளி அரசாங்கமாகும்.
ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. இவ்வாறு மோதிய பின்னர் டைட்டானிக் கப்பல் முழுமையாக மூழ்க 2 மணித்தியாலமும் 40 நிமிடமும் எடுத்தன. இந்த 2 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் கப்பலில் இருந்த "பேண்ட் வாத்தியம்" இசைக்கப்பட்டுக் கொண்டிருந்ததாம். அதேபோன்று தான் இந்த அரசாங்கமும் டைட்டானிக் கப்பலில் இசைக்கப்பட்ட "பேண்ட் வாத்தியம் ' போன்றது என்றார்.
0 comments :
Post a Comment