இர்ஷாத் ஜமால்-
திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு மற்றும் நிலச் சுரண்டல் என்பன பல்லாண்டு காலமாக பொத்துவில் பிரதேசத்தில் அரங்கேறி வருகின்றது. அம்மக்கள் எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகும். இதனால் ஏழை விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
முஸ்லிம் விவசாயிகளால் செய்கை மேற்கொண்டு வரும் விவசாய காணிகளில் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் அத்துமீறி எல்லைக் கற்களை இட்டு குறித்த காணிகளை கபளீகரம் செய்து வருகின்றனர். குறித்த காணிகளில் விவசாயம் செய்வதற்கும் தடை விதித்து வருகின்றனர். தடையை மீறும் பட்சத்தில் விவசாயிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்கின்றனர். இதன் காரணமாகவே விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு, இன்று (06.11.2020) பொத்துவில் ஆமை வட்டுவான் எனும் பிரேதசத்தில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளுக்குள் அத்து மீறிய வன விலங்குத் திணைக்கள அதிகாரிகள், அங்கு தமது எல்லைக் கற்களை நாட்டியுள்ளனர்.
இது விடயம் அறிந்து, குறித்த பிரதேசத்திற்கு விரைந்து சென்ற அ.இ.ம.காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்கள், அங்கு ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருந்த அதிகாரிகளை கடும் தொனியில் கடிந்து கொண்டார்.
குறித்த திணைக்கள உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய அவர், நடந்தேறும் அத்துமீறலை அவர்களது மேலதிக கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனைத் தொடர்ந்து, அத்து மீறி இடப்பட்ட எல்லைக் கற்களை குறித்த அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களின் துரித செயற்பாட்டை பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரிதும் பாராட்டினர்.
0 comments :
Post a Comment