அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார்.
தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. அமெரிக்க தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் அதிபர் ஆக முடியும். தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டு வந்தன. ஆரம்பம் முதலே ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார்.
இதற்கிடையில், வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்குகள் எண்ணிக்கை தற்போது நிறைவு பெற்றது. இந்த மாநிலத்திலும் உள்ள 20 இடங்களையும் ஜோ பைடன் கைப்பற்றினார்.
இதையடுத்து, பெரும்பான்மைக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவையாக உள்ள நிலையில், ஜோ பைடன் 284 தேர்தல் சபை வாக்குகளை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அமெரிக்க அதிபராக பைடன் விரைவில் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் தனது வெற்றி குறித்து டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ அமெரிக்கா, நமது மிகச்சிறந்த நாட்டை வழிநடத்த நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தற்காக நான் பெருமைப்படுகிறேன்.
நமது முன் கடினமான வேலைகள் உள்ளது. ஆனால், நான் உங்களிடம் வாக்குறுதி அளிக்கிறேன்.. நீங்கள் எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்கவில்லை என்றாலும் நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்’ என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment