J.f.காமிலா பேகம்-
அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்துவருகிற ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவினர் இந்த முறைப்பாட்டை செய்திருக்கின்றனர்.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய ஹரின் பெர்ணான்டோ, ஜே.சி. அலவத்துவல, நளின் பண்டார, சுஜித் பெரேரா உள்ளிட்ட சிலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
முறைப்பாட்டின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹரின் பெர்ணான்டோ எம்.பி, நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளில் ராஜபக்சவினருக்கு சார்பாக உள்ள தரப்பினரை வெள்ளையடித்து காப்பாற்றுவதே இந்த ஆணைக்குழுவின் முக்கிய பணிகளாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை இடம்பெற்றதாகக்கூறப்படும் அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் ஊடாக ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்ட மற்றும் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விசாரணைகளும் நடத்தப்படுகின்றன.
குறிப்பாக தற்போதைய ஜனாதிபதி, கடந்த 2015ஆம் ஆண்டுக்குமுன் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய 2008,2009ஆம் ஆண்டுகளில் கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரது வழக்கு விசாரணயில் கடற்படையின் முக்கிய பதவிகளில் இருந்த அதிகாரிகளும், புலனாய்வுத்துறை உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணையும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
மேலும் மிக் விமானக் கொள்வனவில் இடம்பெற்ற மோசடியில் சிக்கிய ரஸ்யாவுக்கான முன்னாள் தூதவர் உதயங்க வீரதுங்கவின் விசாரணைகளும் இந்த ஆணைக்குழுவில் மீள்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment