1800வருடங்களுக்கு முன்னரான புத்தரின் புனிதசின்னம் தீகவாபியில் கண்டெடுப்பு



மாவட்ட செயலகத்தில் வைத்து வழிபாடு: மக்கள் சாரிசாரியாக படையெடுப்பு!
1800ஆண்டுகளுக்கு முன்னரான புத்தரின் புனிதசின்னங்கள் சில புராதன தீகவாபி தாதுகோபுரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.. அதனை தொல்பொருள் திணைக்களத்தினர் முறைப்படி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்து தற்போது அச்சின்னங்கள் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வைத்து அலங்கரிங்கப்பட்டு பூஜை வழிபாடுகள் பிரார்த்தனைகள் தினமும் மூன்றுவேளையும் நடைபெற்றுவருகின்றன.

மூவினமக்களும் சாரி சாரியாக படையெடுத்து அச்சின்னங்களைப் பார்வையிட்டு வழிபாடு செய்துவருகிறார்கள். அமைச்சர்கள் பாராளுமன்றஉறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் தினம்தினம் அங்கு சென்று வழிபடுகின்றனர். இதனால் அம்பாறைக் கச்சேரி களைகட்டிவருகிறது.

இந்து பௌத்த உறவு!

கடந்த செவ்வாயன்று(15) இந்துமுறைப்படியான வழிபாட்டிற்கு அரசாங்கஅதிபர் அழைப்புவிடுத்திருந்தார்.அதற்கமைய அன்று மாவட்டத்திள்ள முக்கிய இந்துக்குருமார்கள் ஆலயதர்மகர்த்தாக்கள் பிரமுகர்கள் அங்குசென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலதிக அரசாங்கஅதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் அனைவரும் பங்கேற்றதுடன் இந்துமதகுருவான கல்முனை சர்வாத்தசித்திவிநாயகர் ஆய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தசிவக்குருக்கள் வேதமோதி வழிபாட்டில் ஈடுபட்டார்.இந் நிகழ்வானது அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் இந்து மன்றமும் இணைந்து இவ் வழிபாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது பூஜைக்குரிய பொருட்கள் எடுத்து வரப்பட்டு இந்து பௌத்த குருமார்களால் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.இதனைத் தொடர்ந்து பௌத்த குருமார்களுக்கு தானம் வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து மக்களுக்கு தானம் வழங்கப்பட்டு இருந்ததோடு இந்து சமய கலாசார திணைக்களத்தின் அனுசரனையுடன் தஹம்பாசல மாணர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலதிக அரசாங்கஅதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக இந்து பௌத்த குருமார்கள் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் விசேட அதிதிகளாக உதவிக்கல்வி பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தர்மகர்த்தா இரா.குணசிங்கம் திருநாவுக்கரசு ஞாயனார் குருகுல பணிப்பாளர் கண.இராஜரெட்ணம் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர். மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்ர்களான கு.ஜெயராஜி வி.பிரதாப் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

இறுதியில் இந்து பௌத்த நல்லிணக்கத்தை பிரதிபலிக்குமுகமாக இந்துகலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரனின் ஆலோசனையின்பேரில் அம்பாறை பௌத்த தஹம் அறநெறி மாணவர்களுக்கு ஒரு தொகுதி அப்பியாசக்கொப்பிகள் நீதிநூல்கள் வழங்கிவைக்கப்பட்டன.நிவடைந்தோருக்கு இந்துமாமன்றத்தினால் உருணவுப்பொதிகளும் வங்கிவைக்கப்பட்டன.

அங்கு அரசாங்கஅதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க கருத்துரைக்கையில்...

சிவனொளிபாதமலை கதிர்காமம் தலதாமாளிகை உகந்தை போன்ற புராதன வணக்கஸ்தலங்களுக்கு நாம் இனமதமொழி பேதங்கடந்து சென்று தரிசித்து வணங்கிவருகிறோம்.
அவ்வாறு தீகவாபியில் 1800வருடங்களுக்கு முன்பு நிருமாணிக்கப்பட்ட புராதன மகாவிகாரையிலிருந்து பெற்ற புனிதசின்னங்களை இன்று நாம் அனைவரும் தரிசித்து மதிப்பளித்துக்கௌரவிக்கின்றோம். தானம் செய்கிறோம். பிரார்த்தனை செய்கிறோம்.
இதுவொரு வரலாற்று நிகழ்வாகும்.இதனை ஆவணப்படுத்தவேண்டும். சம்பவத்திரட்டுப்புத்தகங்களில் பதியவேண்டும். இந்த வராறு 50 ஆண்டுகளுக்குப்பின்வரும் அடுத்த சந்ததிக்கு தெரியவேண்டும். இந்து பௌத்த மத இணைக்கம் என்பது பாரம்பரியமானது.
அப்படி சகல இனமக்களும் இணைந்து செயற்படும்போது நாட்டில் இயல்பாகவே சமாதானம் இனசௌயன்யம் நிலவும். மதத்தால் இனத்தால் மொழியால் வேறுபட்டாலும் எமது இரத்தம் சிவப்புநிறம்தான். அதை மாற்றமுடியாது.எனவே மனிதாபிமானரீதியில் செயற்பட்டு மனிதர்களாக வாழ்வோம். என்றார்.

நாளாந்த நடைமுறை!
கடந்த 3 வாரங்களாக காலை 6 மணிக்கும் பகல்11மணிக்கும் மாலை 6 மணிக்கும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ஆகியோர் தினமும் மக்கள்சகிதம் கண்டியநடனத்தின் மத்தியில் நைவேத்தியபொருட்களுடன் பவனிசென்று மலர்சாத்தி வழிபடும் அதேவேளை பௌத்தபிக்குகளின் பிரீத் ஓதலும் இடம்பெற்றுவருகின்றன.
பௌத்த கலாசாரத்தின்படி தானம் முக்கியஇடம்பிடிக்கிறது. அதன்படி அங்கு தினமும் காலையில் கிறிபத் பால்சோறு வழங்கப்படுகிறது. பகலில்32 வகையான மரக்கறி பழங்களுடன் சோறு வழங்கப்படுகிறது.மாலையில் பலவகையான பழங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை பௌத்தமக்கள் தினமும் வழங்கிவருகிறார்கள். எதிர்வரும் தைமாதம் 10ஆம் திகதி வரை இவற்றை வழங்க ஏலவே முன்அனுமதி பெற்றுள்ளனர்.
இவ்வழிபாட்டின் பின்னர் இப்புனித சின்னங்கள் கலாசாரமுறைப்படி தீகவாபிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரதிஸ்டை செய்யப்படவிருக்கிறது.

வரலாறு
கி.பி.2ஆம் நூற்றாண்டு காலத்தில் நிறுவப்பட்ட தீகவாபி புனித தாதுகோபுரம் பௌத்த மக்களின் பாரம்பரிய வரலாற்று பொக்கிசமாகும்
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசசெயாளர் பிரிவிற்குள் இப்புராதன தீகவாபி சயித்திய இருப்பது சகலரும் அறிந்ததே.புனிதபூமியாக இதனை பிரகடனப்படுத்தியுள்ளனர். புராதன தாதுகோபுரத்தை புனரமைக்குமுகமாக கடந்த சில ஆண்டுகளாக புனரமைப்புப்பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
இப்பணிகள் இடம்பெற்றிருந்தவேளையில் புராதன சயித்திய பகுதியில் புதைத்துவைக்கப்பட்டிருந்த இந்த புனித சின்னங்கள் வெளிப்பட்டன. உடனே தொல்பொருள் திணைக்களத்தினர் உசாரடைந்து அதனைப்பாதுகாப்புடன் மாவட்ட செயாளரிடம் ஒப்படைத்து பின்னர் அதனை முறைப்படி தூசுதட்டி துப்பரவுசெய்ததும் இப்புனித பொருட்கள் பளிச்சிட்டன.

இந்துக்கள் வீட்டுக்கு அல்லது ஆலயம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அடிக்கல் நடும்போது பஞ்சதிரவியங்கள் நவதானியங்கள் இடுவதுபோன்று இந்த புனித சின்னங்கள் தீகவாபியில் அன்று புதைத்திருக்கக்கூடும்.

அவற்றை தங்கநிற பன்னீர்செம்பு வடிவிலான மூன்று கலசத்துள் வைத்து மாவட்ட செயகத்தின் பிரதான ஒன்றுகூடல் மண்டபத்தினுள் வைத்து வழிபட்டுவருகின்றனர். வழமையாக மாவட்ட அபிவிருத்திக்கூட்டம் தொடக்கம் முக்கிய பல கூட்டங்கள் நடைபெறும் எ.ஜ.விக்ரம மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இச்சின்னங்கள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுவருகின்றன.
தைமாதமுற்பகுதியில் இதனை முறைப்படி தீகவாபிக்கு கொண்டுசென்று பிரதிஸ்டை செய்யவிருக்கின்றனர்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :