இதுகுறித்து மேலதிக விபரம் அறிவதற்கற்காக,
சகோதர இணையத்தளம் இன்று -09- எரியூட்டப்பட்ட குழந்தையின் தந்தை கொழும்பு 15 பெர்குசன் வீதியைச் சேர்ந்த எம்.எஸ்.எம். பாஹிமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியது,
அவர் மிகவும் உருக்கத்துடன் தெரிவித்ததை அப்படியே இங்கு தருகிறோம்.
எங்களுக்கு 6 வருடங்களுக்கு பின்னர் இக்குழந்தை கிடைத்தது. குழந்தையின் தாயின் பெயர் ஸப்னாஸ்.
குழந்தைக்கு சுகமில்லை என்றதும், லேடி றிஜ்வே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். அங்கு ஆரம்பத்தில் PCR எடுத்தபோது, கொரோனா தொற்றில்லை என்ற நெகட்டிவே வந்தது.
பின்னர் நேற்று செவ்வாய்கிழமை 8 ஆம் திகதி குழந்தை இறந்துவிட்டது என வைத்தியர்கள் கூறினார்கள்.
அப்போது 20 நாட்களான எமது குழந்தைக்கு கொரோனா பொசிட்டிவ் வந்துள்ளதாக குறிப்பிட்டனர்.
எங்களால் நம்பவே முடியவில்லை. பெற்றோராகிய எமக்கு கொரோனா ஏற்படாத நிலையில், பிறந்து 20 நாளான குழந்தைக்கு எப்படி கொரோனா தொற்றியது என்பதை வைத்தியர்கள் தெரிவிக்கவே இல்லை.
குழந்தையை பற்றவைக்கும் வரை, நாங்கள் கேட்டுக் கொண்டு இருந்தது எப்படி கொரோனா தொற்றியது என்பதைதான். எனினும் எமக்கு இதுவரை பதில் கிடைக்கவேயில்லை.
நாங்கள் தனிப்பட்ட முறையிலும், குழந்தையின் ஜனாஸாவை PCR செய்ய முயன்றோம். எரிப்பதை தடுப்பதற்காகவே அப்படி முயன்றோம். எனினும் அவர்களோ, குழந்தையின் சாம்பலில் PCR செய்யுங்கள் என்றார்கள்.
குழந்தையின் ஜனாஸாவை எரிப்பதற்காக கையொப்பம் இடச் சொன்னார்கள்.
நாங்கள் அதற்கு மறுத்தோம். எனினும் எங்கள் குழந்தையை இரக்கமற்ற முறையில் எரித்துவிட்டார்கள். பிள்ளையை எரிப்பதை கண்ணால் கண்டதும் கலக்கமடைந்து மனது உடைந்து விட்டது.
குழந்தைக்கு ஜனாஸா தொழுகையும் நடத்தவில்லை. எல்லாமே பலாத்காரமாகவே நடந்தது. எரித்த பின்னர் குழந்தையின் சாம்பலை தந்தார்கள். நாங்கள் சாம்பலை வாங்க மறுத்துவிட்டோம்.
இப்போது குழந்தையே இல்லை. எமக்கு சாம்பல் எதற்கு...?
எங்கும் முறையிடவும் இல்லை. இப்போது குழந்தையே இல்லை. முறையிட்டும் என்ன பயன்...?
குழந்தையின் தாயாரும் மிகுந்த வேதனையில் உள்ளார்.
எரிக்கப்பட்ட எமது 20 நாள்களேயான குழந்தைக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். எங்களுக்காகவும், எரிக்கப்பட்ட சகல முஸ்லிம்களுக்காககவும் துஆ செய்யுங்கள்.
அல்லாஹ் கொடுப்பான், அல்லாஹ் கிட்டடியில் கொடுப்பான் எனவும் மிகவும் உருக்கமாக கூறி முடித்தார்.-ஜப்னா முஸ்லிம்
0 comments :
Post a Comment