நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளதாக பிரபல தமிழ் நாளிதழான தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, சின்னத்திரை நடிகை சித்ரா, தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நடிகை சித்ரா, சென்னை – நசரேத்பேட்டை பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியொன்றின் அறையிலிருந்து நேற்று அதிகாலை 2.30 அளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.
தான் நீராடச் செல்வதாக தனது கணவரிடம் கூறி சென்ற சித்ரா, சிறிது நேரத்தின் பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.
சித்ரா தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், அவரது கன்னம் மற்றும் தாடை ஆகிய பகுதிகளில் இரத்த காயங்கள் காணப்பட்டமை, அவரது கணவர் ஹேம்நாம் அருகில் இருந்தமை ஆகிய காரணங்களினால், உயிரிழப்பில் சந்தேகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை கீழ்பாக்கம் அரச வைத்தியசாலையில் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனைகளின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் கோட்டூர்புரம் பகுதியிலுள்ள அவரது இல்லத்திற்கு மக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்ராவின் உயிரிழப்பில் மர்மங்கள் பல காணப்படுகின்ற போதிலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை என கூறப்படுவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment