ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு கடினமாக வேலைகளுடன் 04 வருட சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உச்சநிதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியிருக்கின்றன.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள நாடாளுன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க சிறைக்கு செல்லமுன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றார்.
இதற்காக அவர் கம்பஹாவில் உள் பல்லன்சேன புனர்வாழ்வு மையத்திற்கு தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என சிறைத்தலைமையகம் தெரிவிக்கின்றது.
2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொழும்பிலுள்ள அலரிமாளிகையில் அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியபின்னர் ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க வழங்கிய கருத்தை அடிப்படையாக வைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன், ஸ்ரீலங்காவிலுள்ள பெரும்பாலான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல் மோசடி நிறைந்தவர்கள் என்று விமர்சித்திருந்தார்.
இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து சிங்கள ராவய அமைப்பின் செயலாளரான மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை சிப்பாய் சுனில் பெரேரா ஆகியோரால் உச்சநீதிமன்றில், நீதிமன்ற அவமதிப்பு பிரிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மூலம் ரஞ்சன் ராமநாயக்க நாட்டின் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும், நீதிமன்றத்தை அவமதித்தாகவும் மனுதாரர்கள் மனுவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இந்த மனு சிசிர டி ஆப்ரூ, விஜித் மல்கொட மற்றும் பிரிதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டுவந்த நிலையில் இன்றைய தினம் காலை தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment