வைரஸ் நிபுணர்களும் அடக்கலாம்; என அறிக்கை வழங்கிவிட்டனர். ஆனாலும் அரசு இன்னும் நல்லடக்க அனுமதி வழங்கவில்லை. அறிக்கையை நன்கு ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி, பிரதமருக்கு வழங்கப்படும்; என சுகாதார அமைச்சு அறிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்கள் கூறுகின்றன.
மறுபுறம் ஆரம்ப சுகாதார அமைச்சர் ‘அறிக்கை வழங்க எந்த நிபுணர் குழுவையும் நியமிக்கவில்லை’ என்கின்றார்.
இவ்வளவு காலமும் ‘அடக்கம் தொடர்பாக சுகாதாரத்துறையே தீர்மானிக்க வேண்டும்; என்று சொன்னதுமாறி, சுகாதாரத்துறை அடக்கலாம் என்றதும் இன்னுமொரு அமைச்சர் “ அடக்கம் செய்வதை அரசாங்கமே தீர்மானிக்கும்; நிபுணர்குழு தீர்மானிக்கமுடியாது. மக்கள் நிபுணர் குழுக்களுக்கு வாக்களிக்கவில்லை; என்கின்றார்.
இன்னுமொரு அமைச்சர் ‘நாட்டை நேசிப்பவர்கள் எரித்தலுக்கு ஆதரவு வழங்கவேண்டும்; 90% பேர் எரித்தலுக்கு ஆதரவு வழங்கும்போது 10 வீதமானோர் ஏன் எதிர்க்கவேண்டும்? என்று கேட்கின்றார். உலகின் 99 வீதமான நாடுகள் அடக்கம்செய்ய அனுமதிக்கும்போது இலங்கை எரிக்கவேண்டுமென ஏன் அடம்பிடிக்கிறது? இந்த 99 வீதமான அரசுகளும் அந்நாட்டு மக்களும் தம்நாட்டை நேசிக்காதவர்களா? அல்லது இலங்கை வேறு ஒரு கிரகத்தில் இருக்கின்றதா?அமைச்சரே! பதில் சொல்லுங்கள்; என்று யாராவது இன்று பாராளுமன்றில் கேட்கமாட்டார்களா? என்று மனம் ஆதங்கப்படுகிறது.
அறிக்கை வெளியாகி இத்தனை நாளாகியும் அரசு தீர்மானம் எடுக்காததும் அமைச்சர்களின் மேற்கூறிய கூற்றுக்களும் அரசு முடிவை மாற்றாதோ என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது. அண்மைக்காலமாக ‘அடக்கம்’ அனுமதிக்கப்படப்போவதுபோல் ஒரு தோற்றம் அடிக்கடி எழுவதும் அது அப்படியே மறைந்துபோவதும் வழக்கமாகிவிட்டது.
அவ்வாறான ஒரு தோற்றம் எழுந்ததும் கரும்புகளும் மான்களும் ஏனையவையும் உரிமைகோர தம்மைத் தயார்படுத்துவதும் வானத்தில் இரண்டு சூரியன்கள் தெரிகின்றன; என்று இவர்கள் கூறினால் “ஆமாம் சந்தேகமில்லாமல் இரண்டு சூரியன்களே தெரிகின்றன; என்று சொல்லுகின்ற ‘இவர்களின்’ “அவர்களும்” அதற்கு முன்னோடியாக முகநூலில் முன்னுரைகள் எழுதுவதும் அதன்பின் அத்தோற்றம் மறைந்ததும் பெட்டிப்பாம்பாய் அடங்குவதும் சிலநேரம் அடுத்தவர்மீது பழிபோடுவதும்; வழக்கமாகிவிட்டது.
எனது கவலை
———————
நீண்ட இடைவெளிக்குப்பின் இன்று பாராளுமன்றம் கூடுகிறது. சகல துறைசார் நிபுணர்களும் சிவில் சமூகமும் பல மதத்தலைவர்களும் அடக்கலாம்; என்று கூறியபின்னும் அரசு மௌனம் காக்கும் சூழலில் இன்றைய பாராளுமன்றில் இவ்விடயம் சூடுபிடிக்க வாய்ப்பிருக்கிறது. அது தவிர்க்கமுடியாததும்கூட. இந்த சூழ்நிலையிலும் இது பாராளுமன்றில் எதிரொலிக்காவிட்டால் அதில் அர்த்தமே இல்லை.
இந்நிலையில் எனது கவலையெல்லாம் “அப்பந்தட்டி கூளா(க்)கிய” கதைபோல் ‘எல்லாம் சரியாகவரும்போது இவர்கள் பாராளுமன்றத்தில் பேசி எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள்;’ என்று நமது ‘இவர்களும்’ “இவர்களின் அவர்களும்” தட்டை மாற்றிவிடுவார்களோ! என்பதுதான். (இன்ஷாஅல்லாஹ், இக்கதையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)
0 comments :
Post a Comment