ஒரு காலத்தில் இன்றிருப்பது போல் பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம் என்பதெல்லாம் இருக்கவில்லை. உலகில் கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்திய முஸ்லிம்கள் அனைத்து வகை கல்வியையும் கற்றுக்கொடுக்கும் இடங்களுக்கு மத்ரசா - பாடசாலை- என பெயரிட்டனர்.
இலங்கையில் கல்வித்துறை அறிமுகமான போது அனைத்தும் பாடசாலை என்றே பெயர் பெற்றது.
அக்கால பகுதியில் அல்குர்ஆனை ஓதுவது எப்படி என்பதை கற்றுக்கொடுக்கும் பாலர் பாடசாலைகளுக்கும் மத்ரசா என்றே நம்மவர்கள் அழைத்தனர். அதே போல் அரபு மொழியையும், அம்மொழி மூலம் இஸ்லாத்தை கற்றுக்கொடுக்கும் பாடசாலைகளுக்கும் மத்ரசா என்றே அழைத்தனர். இதன் காரணமாக எது பாலர் பாடசாலை, எது பெரியவர்களுக்கான பாடசாலை என்று பிரித்தறிய முடியாமல் இருந்தது.
அரபுக்கல்லூரிக்கு கல்வி கற்கும் மாணவனை "இவர் மதுரசாவில் ஓதுகிறார்" என்றே சமூகம் சொன்னது. அதே போல் குர்ஆனை பார்த்து ஓத போகும் பாலர்களையும் ஓத போகிறார்கள் என்று அழைத்தது.
இந்த நிலையில் அரபு நாடுகள் மத்தியில் மத்ரசா, மஃஹத், ஜாமியா என்ற சொற்பதங்களின் அடிப்படையில் கல்வி நிலையங்கள் உருவாகின.
மத்ரசா என்பது ஆரம்ப பாடசாலைகளாகவும், ஆண்டு ஐந்து முதல் கல்வி கற்கும் கல்வி நிலையங்கள் மஃஹத் என்றும், பல்கலைக்கழகம் ஜாமியா என்றும் அதன் பீடங்கள் குல்லிய்யா என்றும் அழைக்கப்பட்டன.
ஆனால் நமது நாட்டில் அரபு மொழியில் தனியான பல்கலைக்கழகம் இல்லாததால் அது தவிர அனைத்தும் மத்ரசா என்றே அழைக்கப்பட்டன.
இந்த நிலையில்தான் நாம் சுட்டிக்காட்டினோம், மத்ரசா என்பது பாலர்களுக்கு குர்ஆனை வாசிக்க கற்றுக்கொடுக்கும் கல்வி நிலையங்களை மட்டும் அழைக்க வேண்டும் என்றும், அரபு கல்லூரிகளை மஃஹத் அல்லது கல்லூரிகள் என அழைக்க வேண்டும் என்பதையும் அடிக்கடி எழுதி வந்தோம். அதனை இந்த சமூகம் ஏற்றிருந்தால் இன்று மத்ரசா என்ற சொற்பிரயோகம் கேவலப்படுத்தப்பட்ட ஒன்றாக பாவிக்கப்படும் நிலை வந்திருக்காது.
இதே வேளை பல்கலைக்கழகம் என்ற தரத்தில் அமையாத கல்வி நிலையங்கள் சில நம் நாட்டில் ஜாமியா (பல்கலைக்கழகம்) என அழைக்கப்படுவதை காண்கிறோம். அதே போல் சில அரபுக்கல்லூரிகள் தம்மை குல்லிய்யா (பீடம்) என அழைத்துக்கொள்கின்றன. இது தவறாகும்.
குல்லிய்யா என்பது ஜாமியாவின் கீழ் உள்ள பீடங்களை குறிப்பதாகும்.
ஆகவே அரபு மதுரசா என அழைக்கப்படுபவை தமது பெயரை "மஃஹத்" என்றோ அல்லது "சர்வதேச அரபு பாடசாலை" என மாற்றிக்கொள்ள வேண்டும். பல்கலைக்கழக தரத்தில் இல்லாதவை ஜாமியா என அழைப்பதும், மஃஹத்கள் தம்மை குல்லிய்யாக்கள் என அழைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இது பற்றிய கருத்தாடல்களுக்கும், தீர்வுகளுக்கும் முஸ்லிம் சமய, கலாசார திணைக்களம் முன் வர வேண்டும்.
0 comments :
Post a Comment